பெண் செய்தியாளர் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம், சட்டக்கல்லூரி மாணவி நந்தினி புகார் அளித்துள்ளார்.
அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்க கல்லூரியின் துணை பேராசிரியை நிர்மலா தேவி, 4 மாணவியரிடம், பாலியல் தொடர்பாக நிர்பந்தப்படுத்திய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து, பல்கலைக்கழக வேந்தர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, ஆளுநர் பன்வாரிலாலும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளுநர் பன்வாரிலால் செட்யதியாளர்கள் சந்திப்பை அடுத்து, பெண் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல், அவருடைய கன்னத்தை தட்டினார். ஆளுநரின் செயலுக்கு, அந்த செய்தியாளர், தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார். பலமுறை சோப்பு போட்டு கழுவிவிட்டேன். ஆனாலும் கோபமும் ஆத்திரமும் வருகிறது என்று கடுமையாக பதிவிட்டிருந்தார்.
ஆளுநரின் இந்த செய்கைக்கு, பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆளுந திரும்பப் பெற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, பெண் செய்தியாளர் கன்னத்தில் தட்டியது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட செய்தியாளருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டியதாகவும், அதில் உள்நோக்கம் இல்லை என்றும் கூறியிருந்தார். தங்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் ஆனால் அதற்கான விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் அந்த பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சட்டக்கல்லூரியில் பயிலும் நந்தினி என்ற மாணவி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது, வன்கொடுமை தடுப்பு பிரிவில் சென்னை போலீஸ் கமிஷரிடம் புகார் அளித்துள்ளார்.