
பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான போது கூட இத்தனை எதிர்ப்போ, விமர்சனமோ இல்லை. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக அந்த நடவடிக்கையின் விளைவுகளை அனுபவித்த பின் மத்திய அரசை ‘வெச்சு செய்கின்றன’ எதிர்கட்சிகள்.
நமோ அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வைத்து விமர்சிப்பவர்களில் மிக முக்கியமானவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். காங்கிரஸ் இவருக்கு மோடிக்கு எதிராக லட்சம் ஹெச்.பி. பாய்ச்சலைக் காட்ட முழு சுதந்திரமும் தந்திருக்கும் நிலையில், பணமதிப்பிழப்பு விவகாரத்தை வைத்து நமோ அரசை போட்டுப் பொளக்கிறார் ப.சி. அதுவும் வழக்கமான தனது அதிர்வேயில்லாத, சன்னமான குரலில்.
அந்த வகையில் இப்போது “மோடியின் அரசை பாராட்ட தயாராக இருக்கிறேன், ஆனால் உண்மையில் அவர்கள் போலி நிறுவனங்களை கண்டுபிடித்து, அவை போலிதான் என்று நிரூபித்தால் பாராட்ட நான் தயார். ஆயிரக்கணக்கான நிறுவனங்களை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று போலி நிறுவனமென அறிவிப்பது எப்படி சரியானதாய் இருந்துவிட முடியும்?
நோட்டீஸ் கொடுக்கப் பட்டுவிட்டதாலேயே அது போலி நிறுவனமாகிவிடுமா? சட்டரீதியில், ஆவண ரீதியில் நிரூபிக்க வேண்டுமே!
அப்படி நிரூபித்தால் இவர்களை நான் பாராட்டுகிறேன்.” என்றுள்ளார்.
இந்தியாவில் ஒரு விவகாரத்தை சட்ட ரீதியில் நிரூபிப்பதற்குள் வழக்கு போட்டவரின் பேரனுக்கு பேரனே கிழவனாகிவிடுவான் என்பது மிகப்பெரிய வழக்கறிஞரின் கணவரான ப.சி.க்கு தெரியாதா என்ன? என்பதே விமர்சகர்களின் கேள்வி.