சுயமரியாதையை இழந்து நிற்கிறது! தமிழக அரசின் மானத்தை வாங்கும் தெலுங்கு நடிகர்...!!

By vinoth kumarFirst Published Nov 22, 2018, 1:50 PM IST
Highlights

தமிழக அரசு, மத்திய அரசிடம் சரணடைந்து இருக்கிறது ஒட்டுமொத்தமாக.” என்று அனல் விமர்சனத்தை வைத்தார். இதைத்தான் சுட்டிக்காட்டி பேசும் அ.தி.மு.க. நடுநிலை சீனியர்கள், ”தமிழகத்தை சேர்ந்த ஒரு லெட்டர் பேடு கட்சிக்காரன் பேசினாலும் கூட பரவாயில்லை. ஆனால் தெலுங்கு மண்ணை சேர்ந்த பவன்.

இந்திய அரசியலை தெறிக்கவிட்ட பெண் தலைவர்களில் முக்கியமானவராக இருப்பவர் மம்தா பானர்ஜி. ஸ்திரத்தன்மை காட்டுவதை தாண்டி பிடிவாத பெண்மணி. அப்பேர்ப்பட்டவரே அசந்து, வாய் வலிக்க பாராட்டியது ஜெயலலிதாவை. ‘உண்மையான இரும்பு மனுஷி’ என்றார். தெற்கை தேயவிட்டு வேடிக்கைப் பார்க்கும் குணம் கொண்ட வடக்கை, தன்னை நோக்கி வளைத்து கும்பிட வைத்தவர் ஜெயலலிதா. 

தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக ஒரு பிராந்திய கட்சியை கட்டி உயர்த்தினாரென்றால் எவ்வளவு பெரிய அரசியல் சாணக்கியத்தனமும், நெஞ்சுரமும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மெரீனா மண்ணுக்குள் மறைந்து கொண்ட பின் அவரது கட்சி எதிர்கொள்ளும் அரசியல் சவால்களும், அவமானங்களும், விமர்சனங்களும் விளக்கிச் சொல்லப்பட வேண்டியதில்லை. 
 
அ.தி.மு.க. அரசை, தமிழகத்தின் எதிர்கட்சிகளும், இன்று காலையிலும் கூட அமைச்சரவையினரால் ‘நமது நிரந்தர எதிரிக்கட்சி’ என்று விமர்சிக்கப்பட்ட தி.மு.க.  திட்டினாலும் கூட பரவாயில்லை. ஆனால், தெலுங்கு மண்னை சேர்ந்த நடிகரெல்லாம் அ.தி.மு.க.வின் சுயமரியாதையை பற்றி பேசுவதுதான் அக்கட்சியின் நடுநிலை சீனியர்களை மனம் நோக வைத்திருக்கிறது. 

சென்னை வந்த ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண், ”திராவிட நாடு கோரிக்கை இப்போது இல்லை. ஆனால் திராவிட கலாசாரம், மொழி ஆகியன காப்பாற்றப்பட வேண்டும் நிச்சயமாக”. என்றவர், “தமிழக அரசு பற்றி நான் என்ன  சொல்வது? பொள்ளாச்சுக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள இளைஞர்களை சந்தித்தபோது, ’எங்கள் மாநில அரசு சுயமரியாதையை இழந்து நிற்கிறது!’ என்று என்னிடம் வருத்தப்பட்டார்கள். 

உண்மைதான். தமிழக அரசு, மத்திய அரசிடம் சரணடைந்து இருக்கிறது ஒட்டுமொத்தமாக.” என்று அனல் விமர்சனத்தை வைத்தார். இதைத்தான் சுட்டிக்காட்டி பேசும் அ.தி.மு.க. நடுநிலை சீனியர்கள், ”தமிழகத்தை சேர்ந்த ஒரு லெட்டர் பேடு கட்சிக்காரன் பேசினாலும் கூட பரவாயில்லை. ஆனால் தெலுங்கு மண்ணை சேர்ந்த பவன், பன் பட்டர் ஜாமெல்லாம் நமது சுயமரியாதையை பற்றி பேசுவதும், அந்தளவுக்கு நம் நிலை இருப்பது அசிங்கம், அபத்தம். அம்மாவின் ஆத்மா நிச்சயம் இதையெல்லாம் பார்த்து கலங்கிடும். 

பவன் சொல்லியிருப்பது போல் மத்திய அரசிடம் நாம் பம்மிக் கொண்டிருப்பது உண்மைதானே? அப்படி என்ன குற்றம் செய்துவிட்டோம், நமது குடுமியை அவர்களிடம் கொடுக்க? எதிர்த்தால் ரெய்டு வரும் என்று பயப்படும் அமைச்சரவையின் அச்சம்தானே அம்மாவின் ஆட்சியை அவர்களின் காலில் கொண்டு போய் விழ வைத்திருக்கிறது! ஆக பத்து பேரின் பணம் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக ஆலமரம் போன்ற இயக்கத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் அப்படித்தானே? 

நீங்கள் இப்படியே குனிந்து குனிந்து குறுகிப் போனால், பக்கத்து மாநில பவன் கல்யாண் மட்டுமல்ல அங்கிருக்கும் பைத்தியக்காரன் கூட நம் சுயமரியாதையை தூற்றுவான். இது, பதவி கிடைக்காத எங்களின்  பொறாமை குரல் அல்ல, நம் கழகத்தின் மனசாட்சி மருகும் குரல்!” என்று குமுறியிருக்கின்றனர். இவ்வளவு ஆன பின்னும் எதுவும் மாறாது! என்பதே யதார்த்தம்.

click me!