சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சாலையில் படுத்து தர்ணா..? ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அவலம்..

By Ezhilarasan BabuFirst Published Oct 27, 2021, 12:38 PM IST
Highlights

இதுகுறித்து மருத்துவரிடமும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அதனை கண்டித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீர் கேட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் பிரதான அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது  ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை, இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இந்த மருத்துவமனையில் பழைய அடுக்குமாடி அறுவை சிகிச்சை கட்டிடத்தில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக அந்த கட்டிடத்தில் கழிவறையில் தண்ணீர் வரவில்லை என்றும், இது குறித்து அருகில் உள்ள பணியாட்களிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் நோயாளிகள் கழிவறையை பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இதுகுறித்து மருத்துவரிடமும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அதனை கண்டித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கழிவறையில் தண்ணீர் வர வில்லை, அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என முழங்கினர், இதனால் மருத்துவமனை வலாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறியதை அடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து சிகிச்சை அறைக்கு திரும்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனே தண்ணீர் பிரச்சனை சீர் செய்ய பணிகள் முடுக்கிவிடப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!