குமரெட்டியாபுரத்தைத் தொடர்ந்து களத்தில் குதித்த பண்டாரம்பட்டி  மக்கள் !! ஸ்டெர்லைட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

First Published Apr 2, 2018, 12:46 AM IST
Highlights
Pandarapuram people also protest against sterlit


தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் மக்கள் கடந்த 49 நாட்களாக போராடி வரும் நிலையில் தற்போது பண்டாரம்பட்டி மக்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.

தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்திக்காக ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டது.

இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்கள் போராட்டம் தொடர்ச்சியாக 49 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று  முன்தினம் மக்களோடு மக்களாக உட்கார்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இதே போன்று நேற்று  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் போராட்டத்தில் கலந்து கொண்டார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கமல், அவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினார்

இந்நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில்  இருந்து சுமார் இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலையில் உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராம மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடி, லைசென்சை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என பண்டாரபுரம் கிராம மக்கள் தெரிவித்தனர்.

click me!