திமுக கூட்டணியில் ஓவைசி கட்சியா...? திமுக கூட்டணி கட்சியின் ரியாக்ஸன்..!

By Asianet TamilFirst Published Jan 8, 2021, 9:28 PM IST
Highlights

திமுக தலைவர் கூட்டணி நலன் குறித்து எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் நாங்கள் ஆதரவாகவே இருப்போம் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்களை திமுக தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக இன்று அளித்தோம். இன்றைய காலகட்டத்தில் சமூகநீதியும், சமூக நல்லிணக்கமும் தழைத்தோங்க வேண்டும்; மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். ஆனால், மத்தியில் உள்ள பாஜக அரசு இந்த மூன்று அம்சங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.


மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடிய இடத்தில் பாஜக அரசு உள்ளது. அதற்கு ஒத்துப்போகிற இடத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு உள்ளது. அஞ்சல் துறையில் கணக்கர் பணிக்கு நடைபெறவுள்ள தேர்வு இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடைபெறும் என அறிவித்திருப்பது நாள்தோறும் தமிழர்களின் உரிமையைப் பறித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் 3.5 சதவீத அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் ஏராளமான பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் சிறப்பு நியமன முகாம்களை நடத்த வேண்டும்.
திமுக கூட்டணியில் வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்தாலும் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. திமுக தலைவர் கூட்டணி நலன் குறித்து எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் நாங்கள் ஆதரவாகவே இருப்போம்” என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் ஓவைசி கட்சி சேர உள்ளதாகவும் அந்தக் கட்சியை திமுக சிறுபான்மையினர் மாநாட்டில் பங்கேற்க திமுக அழைப்பு விடுத்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், ஓவைசி கட்சியைச் சேர்க்க தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு  தெரிவித்தன. இந்நிலையில்  திமுக கூட்டணியில் வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்தாலும் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
 

click me!