உடனே அடக்கி வைங்க இல்லைன்னா... ஸ்டாலினை எச்சரித்த ஓபிஎஸ்... எதற்காக தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published May 24, 2021, 1:36 PM IST
Highlights

கொரோனா தடுப்பு பணிகளில் திமுகவினரின் தலையீடு அதிகரித்து வருவதாகவும், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார். 

கொரோனா 2வது அலையால் தமிழகம் திண்டாடி வரும் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கைகள் பலவும் மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் திமுகவினரின் தலையீடு அதிகரித்து வருவதாகவும், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாகப் பார்க்க வேண்டும், அவர்களும் அப்படியே நடக்க வேண்டும்"என்று கூறியிருக்கிறார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.அதாவது, அரசுப் பணிகளில் கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது என்பதுதான் இதன் பொருள்.ஆனால், இதற்கு முற்றிலும் முரணான இருக்கின்றன. வகையில் தி.மு.க.வினரின் செயல்பாடுகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்ற தமிழ் பழமொழிக்கேற்ப ஒரே ஒரு உதாரணத்தை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

சென்னையில் கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியில் நன்கு பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள், சுகாதாரம், பொறியியல், வருவாய்த் துறை பணியாளர்களுடன் இணைந்து திறம்பட பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சென்னையைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. 12.5.2021 அன்று காலை ஒரு நாளைக்கு 7.564 என்று இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.5.2021 அன்று காலை நிலவரப்படி 5,559 ஆக குறைந்திருக்கிறது. இது மிகவும் ஆறுதலான செயல்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க.வினர் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று, தற்போது இருக்கும் களப் பணியாளர்களை நீக்கிவிட்டு, அவர்கள் சொல்லும் நபர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டி இருப்பதாகவும், அதற்கு அதிகாரிகள் கட்சிகளின் பரிந்துரையின் பேரில் களப் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை என்று தெரிவித்ததாகவும், பயிற்சி பெற்று, திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய களப் பணியாளர்களை மாற்றியமைத்தால் நோய்த் தடுப்புப் பணியில் தொய்வு ஏற்படும் என்று எடுத்துக் கூறியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது.

இதுபோன்ற முறையை அனைத்து இடங்களிலும் தி.மு.க.வினர் கடைபிடித்தால் கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் அவப் பெயர் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொய்வின்றி, தங்கு தடையின்றி நடக்க ஏதுவாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

click me!