
வீண்பழி சுமத்தினால் சில தகவல்களை வெளியிட நேரிடும் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், உண்மை நிலையை தெரிவிக்கவே இந்த அறப்போராட்டம் எனவும், அதிமுக பொதுச் செயலாளராக வேண்டியவர் மதுசூதனன் எனவும் சரவெடி வெடித்தார்.
ஆபத்தான காலங்களில் அதிமுக விற்கு , பக்கபலமாக இருந்தவர் மதுசூதனன் என ஓ.பி எஸ் புகழாரம் சூட்டினார்.
மேலும் சசிகலா ஜெயலலிதாவிற்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தை செய்தியாளர்களிடம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கட்சி, ஆட்சி பொறுப்புக்கு வரமாட்டேன் என ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் எழுதியவர் சசிகலா எனவும், அரசியலில் பங்கேற்க மாட்டேன் என கடிதத்தில் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
உதவியாக இருப்பதாக கூறி மீண்டும் ஜெயலலிதாவிடம் தஞ்சம் அடைந்தவர் சசிகலா எனவும், உறவுக்காரர்களை அழைத்து வரமாட்டேன் எனவும் கூறிய சசிகலா வட்டராத்தில் தற்போது என்ன நடக்கிறது.
ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி குடும்பச் சொத்தாக மாற்ற சசிகலா நினைப்பதாகவும், யார் நாடகமாடினார்கள், யார் துரோகம் செய்தார்கள் என ஜெயலலிதா கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கபட நாடகத்தை நிறைவேற்ற அமைச்சர்களை சசிகலா தூண்டி விடுவதாகவும், வீண்பழி சுமத்தினால் சில தகவல்களை வெளியிட நேரிடும் எனவும் சசிகலாவுக்கு பன்னீர்செல்வம் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.