
அதிமுக எம்.பியும் சட்டசபை துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு என்ன தெரியும், எதுவும் தெரியாது. எதுவும் தெரியாமலையே காலத்தை ஓட்டி வருகிறார் என ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்தித்துள்ளர்.
சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியதையடுத்து சசிகலாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
அதில் ஒன்றான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் ஓ.பி.எஸ் அணி நடத்தி வருகிறது.
இதனால் கடும் கோபத்திற்கு ஆளான சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் அணிக்கு எதிராக ஈடுகொடுத்து பல குற்றசாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.
மேலும் ஓ.பி.எஸ் வசம் உள்ள எம்.எல்.ஏக்களையும், எம்.பி.க்களையும் அவர்கள் வசம் இழுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் 8 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தி ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா தரப்பு பல கருத்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில், துணை சபாநாயகர் தம்பிதுரையும் விமர்சித்ததாக தெரிகிறது.
இதனிடையே ஓ.பி.எஸ் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை தனது கிரீன்வேல்ஸ் இல்லத்தில், சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசுகையில், ஜெயலலிதா நீண்ட காலம் இருந்து தங்களை வழிநடத்துவார் என்று நினைத்தோம், ஆனால் எங்களை தவிக்கவிட்டு சென்று விட்டார்.
ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்கும் அதிமுகவை மீட்டெடுப்போம், எம்.பி. தம்பிதுரைக்கு பிரதமரை சந்திக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் கூட அவருக்கு தெரியாது. பேருக்கு இவ்வளவு காலம் எப்படியோ கழித்து விட்டார்.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நான் பிரதமரை பார்க்க சென்ற போது தம்பிதுரையும் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
ஆனால் அவர் முறைப்படி அனுமதி வாங்கி வராததால் அவரால் பிரதமரை சந்திக்க முடியவில்லை. அவர் எடுத்து வந்த மனுவை உங்கள் சார்பில் நான் கொடுப்பதாக கேட்டேன். அதற்கு தம்பிதுரை மறுத்துவிட்டார்.
எதுவும் தெரியாமலேயே தம்பிதுரை இவ்வளவு காலத்தை கழித்து வந்துள்ளார்.
இவ்வாறு ஓ.பி.எஸ் விமர்சித்தார்.