
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னையில் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் மருத்துவ படிப்பகளுக்கான நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வான நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் மசோதாவை ஏற்கனவே சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதே நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முதரலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய க்ரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் பொழுது தமிழகத்துக்கு நீட் தேர்விலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. முதலமைச்சரின் இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.