நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மட்டுமின்றி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகியவைக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து முக்கிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரடியாக பிரச்சார களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வர், நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறினார்.
சீமானின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மரணம் தொடர்பான கருத்தை, தற்போதைய சூழ்நிலையில் சீமான் தவிர்த்திருக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்றும், கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக நடக்கும் எனவும் அவர் கூறினார்..