
இரட்டை இலை சின்னமும்,அதிமுகவும் எங்களுக்குத்தான் சொந்தம்… ஓபிஎஸ் அதிரடி பேச்சு…
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நேற்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டது, நாளை சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள சிறப்புக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.
நாளை நடைபெறவுள்ள இந்த சிறப்புக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு காய் நகர்த்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை கிரீன்வேய்ஸ்சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் குடும்ப ஆட்சி இருக்கக்கூடாது என விரும்பியவர் ஜெயலலிதா என தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஜெயலலிதாவுக்காகவே வாக்களித்தார்கள்.அதனால் ஜெயலலிதாவின் கொள்கைகளை கட்டிக்காத்திட வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் முதலாவதாக, எம்எல்ஏக்கள் முடிவி எடுப்பதற்கு முன்பு ஜெயலலிதாவை நினைத்துப் பாக்க வேண்டும் என கூறினார்,
நாளை சட்டப் பேரவையில் வாக்களிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ்,ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அரசு கொண்டு வரும் தீர்மானத்திற்கு எதிராகவும், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
எம்எல்ஏக்கள் எந்தவிதமான ஆசை வார்த்தைக்கும் மயங்கிவிடக்கூடாது எனவும் ஓபிஎஸ் கூறினார்.
அதிமுக வும், இரட்டை இலைச் சின்னமும், நமக்குத்தான் சொந்தம் என்றும், நமக்கெல்லாம் முகவரி தந்த ஜெயலலிதா வழியில் செயல்படுவோம் என்றும் ஓபிஎஸ் உறுதியுடன் தெரிவித்தார்.