8௦ வண்டிகளோடு ராமேஸ்வரம் விரைகிறார் ஒபிஎஸ் ... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிர்ச்சி.....
இலங்கை கடற்பகுதியில், சுட்டுக்கொள்ளப்பட்ட மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, 8௦ வண்டிகளோடு ராமேஸ்வரம் செல்ல முன்னாள் முதலவர் ஒபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த , மீனவர் பிரிட்ஜோ மரணத்திற்கு நியாயம் கேட்டு அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் . மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என அறிவித்து விட்டனர். இந்நிலையில், இன்று காலை திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், பிரிட்ஜோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் .
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள , பிரிட்ஜோவின் உடலுக்கு ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் . ஏற்கனவே பல கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், அமைச்சர்களும் போராட்ட களத்திற்கு நேரில் சென்று வந்துள்ளனர் .
இதுவரை சென்ற தலைவர்களெல்லாம், ஆர்பாட்டமின்றி சென்று வந்தனர். ஆனால் அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும், ஒபிஎஸ், 8௦ கார்கள் புடைசூழ, ராமேஸ்வரம் பகுதிக்கு செல்ல போவதாக அரசுக்கு உளவுத்துறை மூலமாக தகவல் கிடைத்துள்ளது .
உளவுத்துறையின் இந்த தகவலையடுத்து , ஆளும் தரப்பு மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது .
காரணம் படை பரிவாரங்களுடன் செல்லும் ஒபிஎஸ் உடன் , முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ ஜெயப்பாலும் உடன் செல்ல இருப்பதாக தகவல் கசிந்துள்ளது . ஏற்கனவே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுடன் நல்ல தொடர்பில் ஜெயப்பால் இருப்பதால் தேவையற்ற குழப்பத்தை இவர்கள் மூலம் ஏற்படக்கூடும் என அரசு தரப்பு அச்சப்படுவதாக கூறப்படுகிறது .