ஓபிஎஸ் அணியில் இருந்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி நேற்று விலகினார். அவர் அங்கிருந்து விலகியதை பொது மக்கள் மிகவும் வரவேற்பதாக தெரிவித்தார். மேலும் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
சசிகலா ஓபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டபோது, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி. ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இருந்தார்.
இந்நிலையில் வருகிற 29-ந் தேதி கோவையில் ஓபிஎஸ் அணியின் செயல் வீரர்கள் கூட்டம் கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு பந்தல் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வி.சி.ஆறுக் குட்டி எம்.எல்.ஏ. புறக்கணித்தார். இதனால் அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணிக்கு மாற போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்து வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. திடீரென்று விலகினார். தனக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆறுக்குட்டி , ஓபிஎஸ் அணியிலிருந்து நான் விலகியதை மக்கள் வரவேற்கிறார்கள் என தெரிவித்தார். எடப்பாடி அணியில் இணைவது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் முடிவை அறிவிப்பேன் என்றும், செயல்வீரர்கள் கூட்டத்திற்கான பூஜைக்கு அழைக்காததால் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகியதாக தெரிவித்தார்.