
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பினர் தமிழகம் முழுவதும் 33 இடங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டம் நிரம்பி தமிழகம் முழுவதும் குலுங்கியதால் ஓ.பி.எஸ் குஷியில் உள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக சசிகலா அணி ஓ.பி.எஸ் என இரண்டாக பிரிந்து செயல்படுகிறது.
பின்னர், ஓ.பன்னீர்செல்வத்திற்கு சில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் அதிமுக நிர்வாகிகளும் அடிமட்ட தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் மக்கள் மனதில் பெரிதும் எழுந்து கொண்டிருந்த ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை அமைக்கப்படும் என காபந்து முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
ஆனால் அதையடுத்து பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து வாய்திறக்கவில்லை.
இதனால் ஓ.பி.எஸ் தரப்பினர் ஆளுநரையும், குடியரசுத்தலைவரையும் நேரில் சந்தித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காததால், ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார்.
அதன்படி சென்னையில் ஓ.பி.எஸ் தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை அமைக்க வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மதுசூதனன், பி.எச். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள எதிர்பார்த்ததை விட கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதேபோல் ஆவடியில் முன்னாள் அமைச்சர் மாபா பண்டியராஜன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சட்டசபை வாக்கெடுப்பில் மக்கள் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக பாண்டியராஜன் தெரிவித்தார்.
இதனால் அப்போது தனது தொகுதிக்கு சென்ற அவரை மக்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். அதேபோல், இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கும் கூட்டம் கலை கட்டியது.
இன்று நடக்கும் உண்ணாவிரதம் மூலம், ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தும் விண்ணப்பத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் கையெழுத்து பெறப்படும் என மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் அசோக்குமார் MP தலைமையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் K.Pமுனுசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மனோரஞ்சிதம் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து சசிகலாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மைத்ரேயன் எம்.பி. பேசியதாவது :
கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கபட்டிருந்த 122 எம்.எல்.ஏக்களிடம் ஆளுநர் உத்தரவின் பேரில் அதிரடி விசாரணை நடத்திய முத்தரசியையும் செந்தாமரை கண்ணனையும் பணி இடமாற்றம் செய்து காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பது ஏன்?
அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?
122 அடிமைகள் கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலாவால் அடைத்து வைக்கப்ட்டிருந்தனர்.
உடனே நாங்கள் அனைவரும் ஆளுநரிடம் இதுகுறித்து புகார் அளித்தோம்.
இதையடுத்து கூவத்தூரில் என்ன நடக்கிறது என அறிக்கை அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவின் பேரில் முத்தரசியும், செந்தாமரை கண்ணனும் தனது போலீஸ் வட்டாரங்களுடன் கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏக்களை விசாரணை செய்தனர்.
ஆனால் அப்போது அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் அவர்களை மிரட்டியதாக மீடியாக்களில் செய்திகள் வெளியானது அனைவருக்கு தெரியும்.
இந்த பழிவாங்கும் நோக்குடன் ஐ.ஜி. செந்தாமரை கண்ணனையும் எஸ்.பி. முத்தரசியையும் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர்.
நேர்மையான அதிகாரிகள் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவந்து விடும் என சசிகலாவும், எடப்பாடி பழனிசாமியும் பயப்படுகின்றனர்.
எனவே தான் கஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் தானாக முன்வந்து சசிகலா, எடப்பாடி பழனிசாமி மீதுள்ள வழக்குகளை விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல், திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன், மதுரையில் முத்துராமலிங்கம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுகோட்டை மாவட்டத்தில் மக்களை திசை திருப்பும் நோக்கில் சசிகலா அரசு பல வழிகளில் முயன்று வருகிறது. ஆனால் நெடுவாசல் போராட்டத்தையும் தாண்டி மக்கள் உண்ணாவிரதத்திற்க்கு அலைகடல் என திரண்டு கொண்டே இருக்கின்றனர்
போராட்டத்திற்கு வந்தவர்களின் பெயர்களை கம்யூட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என கூட்டம் திரண்டதை கண்டு சசிகலா அணியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அலை அலையாய் திரளும் கூட்டம் கண்டு ஒபிஎஸ் அணியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த அலைகடலென திரண்ட இந்த போராட்டத்தால் ஏராளமான போலீசார் குவிக்கபட்டிருந்தும் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறினர். மேலும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.