நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசும் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மறந்தும் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. இரண்டு அணிகளாக இருந்து மீண்டும் ஒன்று சேர்ந்த பிறகு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.சும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். வெளிப்புறத்தில் பார்க்க இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும், கட்சியில் உண்மையான அதிகாரம் யாருக்கு என்பதை காட்ட இருவருமே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும் போது மறந்தும் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரை தெரிவிக்கவில்லை. கட்டாயமாக கூற வேண்டிய இடத்தில் வெறும் மாண்புமிகு முதலமைச்சர் என்று மட்டும் முடித்துக் கொண்டார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பலரை பாராட்டி பேசினார், ஆனால் துணை முதலமைச்சர் பெயரை குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை. இதனால் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இடையிலான மனஸ்தாபம் நீரு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருப்பதாகவே கருதப்படுகிறது.