
பாரத பிரதமருக்கு அளிக்கவேண்டிய பாதுகாப்பினை, மரியாதையைத் தராது அவமதித்த பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கும், காங்கிரஸ் ஆட்சிக்கும் அதிமுகவின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டாவுக்கு விமானம் வாயிலாக சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்திய எல்லையோரம் உள்ள உசைனிவாலா கிராமத்தில் அமைந்துள்ள தேசிய சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் 42 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பெரோஸ்பூரில் துவக்கி வைக்க பிரதமரின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி பதிண்டா விமான நிலையம் வந்தடைந்தார். ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து உசைனிவாலா கிராமத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்ல இயலாத நிலையில் சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டு, பஞ்சாப் மாநில காவல் துறைக்கு தலைமை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் பிரதமர் சாலை வழியாக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் உசைனி வாலாவுக்கு 30 கிலோமீட்டர் முன்பு அங்குள்ள பாலத்திற்கு அருகில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற காரணத்தைக் காட்டி பாரத பிரதமரின் வாகனங்கள் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் அங்கிருந்து பிரதமரின் வாகனங்கள் தொடர்ந்து செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழியின்றி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பதிண்டா திரும்பினார் பிரதமர். டெல்லிக்கு புறப்படும் முன்பு நான் உயிருடன் வந்து சேர்ந்து விட்டேன் என் நன்றியை உங்கள் முதல்வருக்கு கூறுங்கள் என அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இவை அனைத்தும் பத்திரிக்கைகளில் செய்தியாக வந்துள்ளன.
பிரதமரின் பாதுகாப்பில் மெத்தனப் போக்கை கடைபிடிப்பது என்பது, குளறுபடி ஏற்படுவது என்பதும், அவரை காக்க வைப்பது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இது மரபு மீறிய செயலாகும், மாண்புமிகு பாரதப் பிரதமர் என்பவர் ஒரு தனிப்பட்ட மனிதர் அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே பிரதமர் அவர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பினை தர வேண்டியது மாநில அரசின் கடமை, இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு இடமில்லை. பதிண்டா விமான நிலையத்திற்கு வந்த பிரதமரை பஞ்சாப் மாநில முதலமைச்சர் வரவேற்காதது, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் மாநில காவல்துறை செய்யாதது.
எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் அவரை திருப்பி செல்ல வைத்தது. ஆகியவற்றைப் பார்க்கும் போது தனது கடமையை செய்ய பஞ்சாப் மாநில அரசு தவறிவிட்டது, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் தவறிவிட்டார் என்பது தெள்ளத் தெளிவாகிறது. பிரதமருக்கு அளிக்கவேண்டிய பாதுகாப்பினை, மரியாதையை தராத பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் ஆட்சிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.