
விழுப்புரம் மாவட்ட அதிமுக (புரட்சித்தலைவி அம்மா அணி) சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, கட்சி வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓபிஎஸ் கலந்து கொண்டு பேசினார், அப்போது 2011 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டார்.
ஜெயலலிதாவுக்கு தனக்கும் பின்னால் யாரையும் பொதுச்செயலாளராக அடையாளம் காட்டவில்லை என்று தெரிவித்த ஓபிஎஸ் தற்போது . கட்சியும், ஆட்சியும் வழித்தவறி நடக்கிறது என குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ செவிடன்காதில் ஊதும் சங்கைப்போல் எதை பற்றியும் கவலையில்லாமல் இருக்கிறார் என குற்றம்சாட்டினார்,
தமிழகத்தில் அமைச்சர்கள் தினம் ஒரு பேச்சு பேசுகிறார்கள். காலையில் நல்ல வாயிலும், இரவானால் நாரவாயிலும் பேசுகிறார்கள். பொறுப்பான பேச்சு யாரும் பேசவில்லை என ஓபிஎஸ் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் எந்தத் திட்டங்களும் முறையாக செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டிய ஓபிஎஸ். அவரது விருப்பமான தமிழகத்தில் அமையவிருந்த மிகப்பெரிய மோட்டார் தொழிற்சாலையும் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது என்றும். இப்படி நடந்தால் தொழில் முதலீட்டாளர்கள் எப்படி தமிழகத்திற்கு வருவார்கள் எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்..
எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தங்களது 2 கோரிக்கை நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும் என ஓபிஎஸ் கூறினார்.
தற்போது நடக்கும் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டனர் என்றும் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து ஆட்சி புரியாவிட்டால் மிகவிரைவில் மாற்றம் ஏற்படும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.