ஏழை விவசாயிகள் பிள்ளைகளின் உயிரை குடிக்கும் ஆன்லைன் கல்வி..!! தலையில் அடித்து கதறும் ஜவாஹிருல்லா..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2020, 10:16 AM IST
Highlights

தனது தந்தையால் திறன்பேசி வாங்கி தர இயலவில்லை என்பதால் பண்ருட்டி அருகில் சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயின் மகன் விக்னேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதும்,

வறிய மாணவர்களின் வாழ்வில் விளையாடும் ஆன்லைன் கல்வியை அரசு முறைப்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம். 

கொரோனாவின் பேராபத்திலிருந்து மக்கள் இன்னும் மீண்டுவரமுடியாத சூழலில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் ஆன்லைன் கல்வி கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த வகுப்புகளினால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்பட்ட இன்னல்கள் சொல்லி மாறாதது. இவற்றைக் களையாமலேயே தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டுள்ளது வருந்துதற்குரியது. 

 

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி குடும்பத்தில், ஒரு செல்பேசியிலிருந்து ஆன்லைன் வகுப்புகளைத் கவனிப்பற்காக மூன்று சகோதரிகளுக்கிடையே ஏற்பட்ட வருத்தத்தில் நித்யஶ்ரீ என்ற நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியும், இதேபோல் தனது தந்தையால் திறன்பேசி வாங்கி தர இயலவில்லை என்பதால் பண்ருட்டி அருகில் சிறு தொண்ட மாதேவி கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயின் மகன் விக்னேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதும், ஆன்லைன் வழி கல்வியின் போதாமையையே வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே பள்ளிகளில் கல்விக்கட்டணம் கட்ட சிரமங்களை அனுபவித்து வந்த பெற்றோர்கள் அதிக விலையுடைய திறன்பேசிகளை வாங்குவதற்கும் அதற்கு இணையச்சேவை பெறுவதற்கும் கடன் வாங்க வேண்டிய சூழலில் அகப்பட்டனர். 

இந்தச் சூழலை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு வகுப்புகள் என்று பொத்தாம் பொதுவாக அரசு சொன்னாலும் அதனை முறையாகக் கணகாணிக்காததினால் பல மணி நேரங்கள் மாணவர்கள் கண்ணைக் கெடுக்கும் ஒளித்திரைகளில் சிக்கி மனவுளைச்சல் அடைந்து வருகின்றனர். நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்ட ஆசிரியர்களும் வருத்தப்பட்டே பாரம் சுமக்கின்றனர். குழந்தைகளின் அருகில் உட்காரும் பெற்றோர்களும் மனவேதனை அடைந்தனர். இதனையும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. கல்வியாளர்களும் மருத்துவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் சொல்லிக்கூட அரசு செவிசாய்க்கவில்லை.எனவே தமிழக அரசு நடந்த தற்கொலைகளைக் கருத்தில் கொண்டு விபரீதங்களை விளைவிக்கும் ஆன்லைன் கல்வி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். மாணவர்களின் குடும்பச் சூழலைப் பள்ளிகளும் கல்லூரிகளும் புரிந்துகொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்கள் திடமனதுடன் உடல்நலத்துடன் ஆர்வமாகக் கற்கக்கூடிய சூழ்நிலையை தமிழக அரசு விரைந்து உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!