உபி.யில் 18000 பேருக்கு ஒரு டாக்டர்.. தமிழகத்தில் 250 பேருக்கு ஒரு டாக்டர்.. இதுதான் திராவிட மாடல் - கனிமொழி

Published : Apr 10, 2022, 08:10 AM IST
உபி.யில் 18000 பேருக்கு ஒரு டாக்டர்.. தமிழகத்தில் 250 பேருக்கு ஒரு டாக்டர்.. இதுதான் திராவிட மாடல் - கனிமொழி

சுருக்கம்

"உங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் எப்படி பொருளாதார வளர்ச்சியிலும் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று டெல்லியில் பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். இதுதான் திராவிட மாடல். பொருளாதார வளர்ச்சி என்பது அதானி, அம்பானியை மட்டும் வளர்ப்பது இல்லை”.

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் 18,000 பேருக்கு 1 மருத்துவர். ஆனால், தமிழகத்தில்  250 பேருக்கு 1 மருத்துவர். இதுதான் திராவிட இயக்கம் உருவாக்கி வைத்திருக்கும் சாதனை. நம்முடைய முதல்வர் சொல்லும் திராவிட மாடல் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் சிறப்பான திட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தும் தமிழக அரசின் பட்ஜெட்டை விளக்கியும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிறைந்துகிடந்தன. மருத்துவமனையில் ஒரு படுக்கை கிடைக்கக்கூட பலருக்கும் போன் போட்டு பேச வேண்டியிருந்தது. ஆனால், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நிலையை மாற்றி காட்டினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் எந்தத் தொழிலையும் புதிதாகத் தொடங்க முடியவில்லை. ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளையும்கூட மூடிவிட்டுதான் செல்லும் நிலை இருந்தது. தமிழக மக்கள் யாருக்கோ ஓட்டுப் போட்டு, இவர்கள் ஆட்சி செய்தார்கள். ஆட்சி செய்யவே தகுதி இல்லாதவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். இன்று இந்தியாவிலேயே விவசாயத்த்க்கென  தனி பட்ஜெட் தாக்கல் செய்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சிலர் விவசாயிகளை காப்போம் என பேசுவார்கள். ஆனால், விவசாயிகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தவர்கள் அவர்கள்தான். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் ஏழை, எளிய,  சாமானிய மக்களின் குழந்தைகள் படிக்க வழியே இல்லை. தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு ரூ. 1000 நிதி உதவி கொடுத்திருப்பது நமுடைய முதல்வரின் பட்ஜெட். பெண்கள் உயர்கல்வி படிக்க ஊக்கவிக்கும் இத்திட்டம் பட்ஜெட்டிலேயே சிறப்பானதாகும்.

இந்தி இணைப்பு மொழியா?

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் 18,000 பேருக்கு 1 மருத்துவர். ஆனால், தமிழகத்தில்  250 பேருக்கு 1 மருத்துவர். இதுதான் திராவிட இயக்கம் உருவாக்கி வைத்திருக்கும் சாதனை. நம்முடைய முதல்வர் சொல்லும் திராவிட மாடல். ஆனால், நாம் நம்முடைய பிள்ளைகளுக்காக கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் நம் பிள்ளைகள் படிக்க முடியாதபடி நீட்டை கொண்டு வந்திருக்கிறார்கள். மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக பாஜகவினர் கூறினர். ஆனால், மத்திய சுகாதாரத் துறை அதிகாரி நீதிமன்றத்தில் உள் ஒதுக்கீடு அரசியல் அமைப்புக்கு எதிரானது என வாதிட்டார். இது மத்திய அமைச்சர்களுக்கு தெரியாதா?

மத்திய உள் துறை அமைச்சர் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டும் எனப் பேசுகிறார். ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக வேண்டும் என்கிறார். நமக்கும் ஒன்றிய அரசுக்கும் பல பிரச்சினைகள் உண்டு. இப்போது மீண்டும் மொழிப் பிரச்சினைக்கும் வித்திடுகிறார்கள். மத்திய அரசுக்கு தெரிந்த இரண்டே இந்திய மொழிகள், ஹிந்தி, சமஸ்கிருதம் மட்டும்தான். கோயிலுக்குள்ளும் விடமாட்டீர்கள். அந்த வேலைக்கும் செல்ல முடியாது. பிறகு எதற்கு நாங்கள் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்? மருத்துவக் கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற பழைய நிலையை கொண்டு வரப் பார்க்கிறார்கள். ஆங்கிலம் படித்தால் மக்கள் எல்லோரும் உலக அறிவை பெற்றுவிடுவார்கள். எனவே, மக்கள் அதை தெரிந்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். மக்கள் தெரிந்துகொண்டால் அவர்களால் ஆட்சி நடத்த முடியாது. அதற்காகத்தான் இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்கிறார்கள். 

இதுதான் திராவிட மாடல்

மத்தியில் உள்ள பாஜக ஆட்சி தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. தமிழகத்துக்கு வர வேண்டிய திட்டங்கள், நிதி என எதுவுமே கிடைப்பதில்லை. மத்திய அரசு எந்த நிதியையும் விடுவிக்காவிட்டாலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. உங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் எப்படி பொருளாதார வளர்ச்சியிலும் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று டெல்லியில் பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். இதுதான் திராவிட மாடல். பொருளாதார வளர்ச்சி என்பது அதானி, அம்பானியை மட்டும் வளர்ப்பது இல்லை” என்று கனிமொழி பேசினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!