7 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத தமிழ் பள்ளிக்கூடம் - நடவடிக்கை எடுக்குமா கர்நாடக அரசு ..

By Thanalakshmi VFirst Published Nov 28, 2021, 2:58 PM IST
Highlights

பெங்களூரில் கடந்த 7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் அரசு தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வருவதாகவும் வணிகவளாகம் கட்டும் நோக்கில் அடிப்படைவசதிகள் செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் கூறப்படும் சம்பவம் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

கர்நாடகாவின் பெங்களூரில் அசோக் நகர் பகுதியில் 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் இந்த அரசு தமிழ் உயர் ஆரம்பப்பள்ளி. இந்த பள்ளிக்கூடம், விதானசௌதாவில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. இந்த பள்ளி ஆங்கிலேய ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக மின்சாரம் வசதி இல்லாமல் இந்த பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், 10 மாணவர்கள் மட்டுமே படித்துவருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்பள்ளியில் மாணவர்களுக்கு, ஒரே ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகிறார். மின்சார கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு பள்ளிக்கு வருமானம் இல்லாததால், 7 ஆண்டுகளுக்கு முன்பு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 பள்ளியில் மின்சாரம் இல்லாததால் மாணவர்களால் பள்ளியின் உள்ளே அமர முடியாத நிலை உள்ளது. மின் விளக்கு, மின்விசிறி போன்ற எந்த ஒரு வசதியும் இல்லாததால் படிக்கும் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், பள்ளியில் கழிவறைக்கு தண்ணீர் வசதியும் இல்லை. குடிநீர் வசதி இல்லை. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சரளமாக குறைந்து வருகிறது. பள்ளி கட்டடமும் பழமையானது என்பதால், இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் யாரும் முன்வரவில்லை என்று தெரிவிக்கபடுகிறது.

மேலும் சமூக ஆர்வலர் சிலர் கூறும் போது, இந்த இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக தமிழ் அரசுப்பள்ளிக்கு அடிப்படை வசதி வழங்காமல் கர்நாடக அரசு செயல்படுவதாக கூறுகின்றனர். இதனால் பள்ளியில் படித்துவந்த மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 10 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பள்ளிக்கு மின்வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்துதர பள்ளிக்கல்வித்துறையோ, மக்கள் பிரதிநிதிகளோ அக்கறை செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட தமிழ்ப்பள்ளி என்பதால், இப்பள்ளியின் வளர்ச்சியில் யாரும் அக்கறை செலுத்துவதில்லை எனவும் இப்பகுதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள தமிழர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வியை கொடுக்க நினைத்தாலும், அதற்கான வாய்ப்பு அரசுப்பள்ளிகளில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளாதாகவும் கூறுகின்றனர்.

இந்த தமிழ்ப்பள்ளியை கன்னடப்பள்ளியாக மாற்றும் முயற்சி ஒருபுறம் நடந்து வருவதாகவும், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி, பள்ளியை மூடிவிட்டு அந்த இடத்தில் வணிக நிறுவனங்களை கொண்டு வரவும் திட்டம் தீட்டியுள்ளதாகவும் தமிழ் பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் அளவிற்கு பொருளாதார பலமோ, அரசியல் பலமோ, ஆள்பலமோ எங்களிடம் இல்லை எனவும் வேதனை தெரிவித்தனர். ஒருவேளை இந்த தமிழ்ப்பள்ளி மூடப்பட்டால், எங்கள் குழந்தைகள் எங்கு சென்று படிப்பார்கள்? என்று கேள்வியெழுப்பும் அவர்கள், தற்போது அந்த பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், குழந்தைகளை சேர்க்கவும் பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள் என்கின்றனர். 

இந்த பள்ளியின் கட்டடத்தை இடித்துவிடும் திட்டம் இருப்பதால் தான், மின்சார வசதி அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் நிலையில் இது குறித்து கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கையில், "சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அதிகாரியை அனுப்பி பள்ளியை பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதன்பிறகு, பள்ளிக்கு மின்வசதி செய்துதரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

வரலாற்று அறிஞர்கள் சிலர், "100 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களுக்கு, பாரம்பரிய கட்டட அந்தஸ்து கிடைக்கிறது. இந்த பள்ளிகட்டடம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளதால், 75 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அக்கட்டடத்திற்கு பாரம்பரிய கட்டட அந்தஸ்து அளித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது போன்ற கட்டடங்கள் பழம் பெங்களூரின் அடையாளங்களாக திகழ்கின்றதாகவும் அண்மையில் 120 ஆண்டு பழமையான கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் கட்டடம், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். எனவே இந்த கட்டடத்தின் பழமையான‌ அழகு மாறாமல், அதை மீட்டெடுக்க வேண்டும்  என்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

click me!