
தமிழக அரசு மருத்துவர்களின் சலுகையை திமுக அரசு மீட்டு தந்துள்ளதோடு அதன் பலன்களை தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு முழுமையாக கிடைக்க பெற செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக குறிப்பாக நீட் தேர்விற்கு பிறகு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் எந்த சலுகைகளும் கிடைக்காத நிலை இருந்தது, இதனால் முதுநிலை படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் அரசு பணியில் சேர்வதில் பெரிதாக ஆர்வமற்று இருந்தனர். மாறாக நீட் தேர்வின் விளைவாக வேறு மாநிலத்தை சார்ந்த மாணவர்கள் கணிசமான அளவில் தமிழகத்தில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர்ந்தார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ் தெரியாத நிறைய மருத்துவர்கள் இருந்ததற்கு இதுவே காரணம். மேலும் தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சலுகை வழங்காமல் இருந்த காரணத்தினால் பெரும்பாலான உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் முன்னெப்போதையும் விட அதிகமான வேறு மாநில மருத்துவர்கள் சேர்ந்ததால் அவர்கள் படிப்பை முடிந்தவுடன் சொந்த மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர். அதனால் அந்த உயர் சிறப்பு மருத்துவப்படிப்பின் பலன் தமிழக மக்களுக்கு சென்றடையாமல் போனது.
உதாரணமாக MCh Cardio Thoracic Surgery படிப்பை தமிழ் நாட்டில் உள்ள மருத்துவர் படித்தால் அவர் திரும்ப தனது அரசு பணிக்கே ஏதாவது மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கிருக்கும் மக்களுக்கு இந்த படிப்பின், இந்த உயர் சிறப்பு மருத்துவத்துறையின் பலன் கிடைக்கும் மாறாக நிறைய வெளி மாநில மருத்துவர்கள் கடந்தாண்டுகளில் முடித்துவிட்டு அவர்களது மாநிலங்களுக்கே சென்று விட்டதால் தமிழக மக்களுக்கு அதனால் எந்த பயனும் இல்லாமல் போனது. இப்போது தமிழக அரசு தனது சிறப்பான வாதத்தின் மூலம் இந்த இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருப்பதால், தமிழக அரசு மருத்துவர்களுக்கு இழந்த சலுகைகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதன் பலன் தமிழ் நாட்டு மக்களுக்கும் முழுமையாக கிடைக்க பெறும். அந்த வகையில் சமூக நீதியின் பலனை மக்கள் அனைவருக்குமான பலனாக மாற்றும் திராவிட முன்மாதிரியின் வெற்றி இது.