வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா.. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்.? திமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் சுளீர்

By Raghupati RFirst Published May 30, 2023, 12:50 PM IST
Highlights

ஒரு குடும்பத்தினுடைய கஜானாவை நிரப்புவதற்கான நடவடிக்கையோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவ, மாணவியர் அதிருப்தி, நகைக் கடன் வாங்கியோர் அதிருப்தி, கல்விக் கடன் வாங்கியோர் அதிருப்தி, இல்லத்தரசிகள் அதிருப்தி, மின் பயனீட்டாளர்கள் அதிருப்தி, வீடு வைத்திருப்போர் அதிருப்தி, வாடகைதாரர்கள் அதிருப்தி, அரசு ஊழியர்கள் அதிருப்தி, ஆசிரியர்கள் அதிருப்தி, அரசு மருத்துவர்கள் அதிருப்தி, நுகர்வோர் அதிருப்தி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் அதிருப்தி என ஒட்டுமொத்த தமிழ்நாடே கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் அதிருப்தியில் இருக்கின்ற நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக பேருந்துகளில் பயணம் செய்யும் ஏழை, எளிய மக்களையும் கடும் அதிருப்திக்கு திமுக அரசு ஆளாக்கியிருக்கிறது.

தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற குறிக்கோளை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருதல், பொதுத் துறை நிறுவனங்களில் வெளிமுகமை மூலம் ஆட்களை அமர்த்துதல், குறைந்த சம்பளத்தில் ஆட்களை நியமித்தல் என மக்கள் விரோத நடவடிக்கைகள்தான் கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. வெளிமுகமை மூலம், அதாவது Outsourcing மூலம் ஆட்களை அமர்த்துவது என்பது அரசுத் துறைகள் மற்றும் இதர பொதுத் துறை நிறுவனங்களிலும் நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்குப் பெயர்தான் சொல்லாததையும் செய்வது என்பது. திமுக அரசின் இந்தச் செயல் சமூக நீதிக்கு எதிரானது.

இதையும் படிங்க..ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விபரம்

தனியார் ஏஜென்சி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ? இதன் மூலம் வரும் வருமானம் யாருக்கு செல்கிறது? போன்ற கேள்விகள் எல்லாம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஒரு குடும்பத்தினுடைய கஜானாவை நிரப்புவதற்கான நடவடிக்கையோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது. திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிப்பது தொழிலாளர் விரோத நடவடிக்கை என்பதையும், சமூக நீதிக்கு எதிரானது என்பதையும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுத்தும் என்பதையும், போக்குவரத்துக் கழகங்கள் அழிந்துவிடும் என்பதையும் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களில் வெளிமுகமை மூலம் ஆட்கள் அமர்த்தப்படுவதை உடனடியாக கைவிட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை இனி வருங்காலங்களில் தடுத்து நிறுத்தவும், காலிப் பணியிடங்களை முறையாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வர் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

click me!