Vijayakanth: இனி எல்லாமே நான்தான்... விஜயகாந்தை ஓரம்கட்டி பிரேமலதாவுக்கு முக்கியப்பதவி..!

By Thiraviaraj RMFirst Published Dec 9, 2021, 4:32 PM IST
Highlights

 தேமுதிக கடந்த 10 ஆண்டுகளில் தவறான அரசியல் முடிவுகளால்  தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வருகிறது.
 

2011 ஆம் ஆண்டு தமிழகத்தின் எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தை அலங்கரித்தது தேமுதிக. ஆனால் அதன் பின்னர் அக்கட்சிக்கு மிகப்பெரிய வீழ்ச்சியாக அமைந்தது.

இப்போது தமிழக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு கட்சியாகவே உள்ளது. இதற்கு மிக முக்கியமானக் காரணம் தேமுதிகவின் முகமாக இருந்த விஜயகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட நலிவுதான் காரணம். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகள் வரை சென்று சிகிச்சைப் பெற்ற விஜயகாந்த் இப்போது வீட்டில் ஓய்வில் உள்ளார்.

கட்சி பணிகளை எல்லாம் இப்போது பொருளாளராக இருக்கும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் தம்பி சுதீஷ் ஆகியோர்தான் பார்த்துக் கொள்கின்றனர். விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தேமுதிகவின் செயல் தலைவராக பிரேமலதாவை நியமிக்க மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்புக்கு முன் செயல் தலைவர் அறிவிப்பு வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், அதிமுகவிடம் தோல்வியைச் சந்தித்தார். அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிக தோல்வியை தழுவியதால், 2009ல் 10.3 சதவீதமாக இருந்த தேமுதிகவின் வாக்கு விகிதம் தற்போது ஒரு சதவீதத்துக்கு கீழ் சென்றுவிட்டது.

 

கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் அமமுகவுடன் கூட்டணி அமைத்து, 60 இடங்களில் போட்டியிட்டு, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதன்பின், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பெரிய வெற்றி பெறவில்லை. இதனால் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களில் பலர் திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்தனர். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி  அந்தஸ்தை பிடித்த தேமுதிக கடந்த 10 ஆண்டுகளில் தவறான அரசியல் முடிவுகளால்  தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளது. ஆனால் கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில், சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வரும் தேர்தல்களில் தேமுதிகவை எழுச்சி பெற வைக்க அதிரடி முடிவுகளை எடுக்க வேணடும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. விஜயகாந்த் தலைவராக தொடரும் நிலையில் உடல்நிலை காரணமாக அவரால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. எனவே பொருளாளர் பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் அல்லது பொதுச் செயலாளர் பதவி உருவாக்கி அவரை நியமித்து முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இதற்கு பிரேமலதா, விஜயகாந்துடன் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என கூறியுள்ளார்.

ஏற்கனவே, விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாததால் பிரேமலதா தான் கடந்த தேர்தல்களில் பிரசாரம் செய்தார். கூட்டணி பேச்சுவார்த்தை என அனைத்தும் அவரது தலைமையில் தான் நடந்தது. தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என கட்சியின் அனைத்து கூட்டங்களும் அவரது தலைமையில் தான் நடக்கிறது. எனவே, கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளை எடுக்கும் வகையில், பிரேமலதாவை கட்சியின் செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய சூழலில் கூட்டணிக்கான வாய்ப்பு இல்லை எனவும், எனவே தனித்து போட்டியிடுவதற்கு கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் எனவும் தே.மு.தி.க. தலைமை சார்பில் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் கட்சியில் தகுதியான நபர்களை தேர்வு செய்து தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோன்ற நபர்களை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் உழைக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முழுமனதாக தீர்மானிக்கப்பட்டது.
 

click me!