இப்போ ADMK வெறும் கொங்கு வேளாளர் கட்சிதான். இனி சாதி கட்சிகள் பாஜக பின்னால் அணி திரளும்.? ரவீந்திரன் துரைசாமி.

Published : Feb 02, 2022, 11:21 AM IST
இப்போ ADMK வெறும் கொங்கு வேளாளர் கட்சிதான். இனி சாதி கட்சிகள் பாஜக பின்னால் அணி திரளும்.? ரவீந்திரன் துரைசாமி.

சுருக்கம்

ஆனால் நாடாருக்கு வாக்கு வங்கி இருக்கிறது, தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஓட்டு இருக்கிறது, முத்தரையர்களுக்கு ஓட்டு இருக்கிறது. பாஜக கூட்டணியில்  இருந்திருந்தால் தான் அந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு கிடைத்திருக்கும். இப்போது நினைத்தால் பாஜகவால்  சாதிய சமூகங்கள் மத்தியில் கருத்துருவாக்கத்தை, தாக்கத்தை ஏற்படுத்த முடியும். 

கூட்டணியில் இருந்து பாஜகவை அதிமுக கழட்டிவிட்டுள்ள நிலையில் இப்போது அக்கட்சி வெறும் கொங்கு வேளாளர் கட்சியாகவே பார்க்கப்படும் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். பாஜக இல்லாமல் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது, அதே பாஜக கூட்டணியில்  இருந்ததால் விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற முடிந்தது என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் திமுகவுக்கு எதிராக அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக களமாடி வந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்கள் ஆண்மை இல்லாதவர்கள் என பேசிய பேச்சுதான் முதன்மையான காரணம் என உள்ளது. இந்நிலையில்தான்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இரு கட்சிக்கும் இடையே இழுபறி ஏற்பட்டது. கூட்டணியில் இருந்து கொண்டே தொடர்ந்து  பாஜக தலைவர்கள் அதிமுகவினரை சீண்டும் வகையில் பேசி வருவதால் நீண்டகாலமாகவே அதிமுக தலைவர்கள் மத்தியில் பாஜக மீது மனக்கசப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நயினாரின் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் ஆகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

இதனால்தான் இனி என்ன நடந்தாலும் சரி கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டிவிடுவது என அதிமுக முடிவு  செய்து விட்டதாக கடந்த வாரமே செய்திகள் உலா வந்தன. இந்நிலையில்தான்  இடப் பங்கீடு பேச்சு வார்த்தையில் இரு கட்சிகளும் இடையே உடன்பாடு  எட்டப்படவில்லை எனக்கூறி கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். நீண்டகாலமாகவே பாஜக கூட்டணி என்பது அதிமுகவுக்கு பெரும் சுமையாகவே இருந்துவந்தது என்றும், அதனால் அதிமுக  இஸ்லாமிய- கிறிஸ்துவ வாக்குகளை இழக்க நேரிட்டது என்றும், பல நேரங்களில் அதிமுகவின் மூத்த அமைச்சர்களே வெளிப்படையாக விமர்சித்து வந்தனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட  அதிமுகவின் தோல்விக்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் என வெளிப்படையாகவே சி.வி சண்முகம் பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

அதிமுக பாஜக கூட்டணியில் பல சாதகங்கள் இருந்தாலும் அதே அளவிற்கு பாதகங்களும் இருந்தது என்பதே அதிமுகவினரின் கருத்தாக இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிணைந்து பயணித்த அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு இருப்பது இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து பலரும் பல வகையில்  விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்  கூட்டணியில் இருந்து பாஜகவை அதிமுக கழட்டிவிட்டிருப்பது அதிமுகவுக்கு நன்மையை விட தீமையே அதிகம் என பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு  அவர் கொடுத்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:- 

அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்திருக்கும் பட்சத்தில்  திருப்பூர், கோவை, சேலம் ஆகிய இடங்களில் திமுகவுக்கு சவால் கொடுத்திருக்க முடியும்.  கூட்டணி பிரிந்து இருப்பதால் அதற்கு இப்போது சாத்தியமில்லை.  பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் அதிமுக கும்மிடிப்பூண்டி காஞ்சிபுரத்தில் வெற்றி பெற முடிந்தது. பாஜக கூட்டணியில் இல்லாததால்தான்  ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக 27 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

பாஜக கூட்டணியில் தான் விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது, அதனால்தான் அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் 40 சதவீத அளவிற்கு வாக்குகளையும் பெற்றது. இப்போது அதிமுக 75 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது என்றால் அதற்கு பாஜக ஒரு காரணம். பாஜகவின் வாக்கு சதவீதம் குறைவு என்று கூறலாமே தவிர அதற்கு பலமே இல்லை என்று எவரும் கூற முடியாது. கூட்டணி முறிவு என்ற முடிவு  அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு அல்ல, இது இபிஎஸ் ஓபிஎஸ் எடுத்த முடிவு. அதிமுக தொண்டர்கள் வெறும் கொடி பிடிக்கவும், அடிபட்டு சாகுவும்தான்.  இனி எல்லா முடிவுகளும் ஓபிஎஸ்- இபிஎஸ் மட்டும் தான் எடுப்பார்கள். இபிஎஸ் ஓபிஎஸ்தான் அதிமுக. அவர்கள் எடுப்பதுதான் இனி முடிவு,  எடப்பாடி பழனிச்சாமி வேண்டாம் என்று முடிவு செய்து விட்டால் அவ்வளவு தான்.   அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி கழட்டி விடுவதில் வல்லவர். அதைதான் இப்போதும் நிரூபித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி  கழற்றிவிடுவதில் கில்லாடி என்பதை ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். தற்போது அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்பது திமுகவுக்கே சாதகமாக அமைந்துள்ளது. பாஜகதான் அதிமுகவுக்கு பெரும் பாதகமாக அமைந்து விட்டது என்று கூறுமளவிற்கு ஒன்றும் இல்லை அதேபோல அதிமுக நினைப்பதுபோல கிறிஸ்துவ- இஸ்லாமியர்கள் ஓட்டு அதிமுகவுக்கு இனி கிடைக்காது. பாஜக கூட்டணி இல்லாமல் போனால் அதிமுக வேளாள கவுண்டர் கட்சி மற்றும் மறவர் கட்சியை என்ற நிலையிலேயே பார்க்கப்படும். அதனால் அந்தக் காட்சியில் நாடார்கள், முத்தரையர்கள், தேவேந்திரகுல வேளாளர்களுக்கு இடமில்லை என்ற வகையில் சாதி ரீதியான முரண்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மத முரண்பாடு மட்டும்தான் அதிமுகவுக்கு பாதிப்பு என எடப்பாடி பழனிச்சாமி நினைத்துக் கொண்டிருக்கிறார். கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் வாக்கு மட்டும்தான் வாக்கு என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நாடாருக்கு வாக்கு வங்கி இருக்கிறது, தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஓட்டு இருக்கிறது, முத்தரையர்களுக்கு ஓட்டு இருக்கிறது. பாஜக கூட்டணியில்  இருந்திருந்தால் தான் அந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு கிடைத்திருக்கும். இப்போது நினைத்தால் பாஜகவால்  சாதிய சமூகங்கள் மத்தியில் கருத்துருவாக்கத்தை, தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் அண்ணாமலை அது போன்ற ஒரு வழி தேவையில்லை, மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டுமென இதை அனுகி வருகிறார். இவை விரைவில் இபிஎஸ் ஓபிஎஸ் புரிந்துகொள்வார்கள். அப்படி இல்லை என்றால் சாதிய சமூக மக்களின் வாக்குகளை தங்கள் பின்னால் அணிதிரட்ட அண்ணாமலை களமிறங்குவார். இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!