பெரியார் சிலையை தொட்டுப்பார்க்க கூட எவனுக்கும் தகுதி கிடையாது எனவும் தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறும் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவிடம் வீழ்ந்தது. இந்த நிலையில் பாஜக தொண்டர்கள் அங்குள்ள லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர்.
இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது பேஸ்புக் பக்கத்தில், கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை... தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா. சிலை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், பெரியார் சிலையை தொட்டுப்பார்க்க கூட எவனுக்கும் தகுதி கிடையாது எனவும் தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறும் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் எச்.ராஜாவை பேசி வருவது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.