திமுக கூட்டணியின் போராட்டத்தை தமிழகத்தில் ஒருத்தரும் சீந்தவில்லை... குஷியில் அண்ணாமலை.!

By Asianet TamilFirst Published Sep 28, 2021, 8:10 AM IST
Highlights

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் திமுக-காங்கிரஸ்-இடதுசாரிகள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போராட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கு நன்மை தருகிற, விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றுகிற வகையிலான மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த விவசாய சட்டங்களை எதிர்த்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களை எதிர்த்து கடையடைப்பு போராட்டம் அறிவித்தன.
ஆனால், இந்தப் போராட்டம் படுதோல்வி அடைந்ததோடு, சில அரசியல்கட்சிகளைத் தவிர எந்தவொரு விவசாயிகளும் சாலையில் இறங்கி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட தயாராக இல்லை. ஏனென்றால், பிரதமரின் விவசாயிகளுக்கான பல திட்டங்கள், பயிர்க் காப்பீடு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உள்ளிட்ட பல திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டியுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டார். 
தமிழகத்தில் 25 ஆண்டு காலம் ஆட்சி செய்த திமுக, விவசாயிகள் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றி, தொழில் முனைவோர்களாக மாற்றும். வேளாண் சட்டங்களை புறக்கணிக்கும் முதல்வர், விவசாயிகளின் இன்றைய நிலைக்கு என்ன தீர்வு தரப்போகிறார் என்பதை வெள்ளை அறிக்கையாக தரவேண்டும்.” என்று அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

click me!