இனி தருமபுரியில் திமுக வீக் கிடையாது.. மாஜி அமைச்சர் பழனியப்பன் வருகையால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஸ்டாலின்.!

Published : Dec 04, 2021, 10:32 PM IST
இனி தருமபுரியில் திமுக வீக் கிடையாது.. மாஜி அமைச்சர் பழனியப்பன் வருகையால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஸ்டாலின்.!

சுருக்கம்

 "அவரை திமுகவில் எப்படியும் சேர்க்க வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்தோம். எவ்வளவோ யார் யாரையோ தூதுவிட்டோம். ஆனால், அந்தச் சூழலில் பழனியப்பனால் இங்கு வர முடியவில்லை."

இனி தருமபுரி மாவட்டத்தை வீக் என்று யாரும் சொல்லக் கூடாது. சொல்லவும் முடியாது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் பழனியப்பன் வருகையால் முதல்வர் மு.க. ஸ்டாலின் உற்சாகமாகப் பேசினார். 

அமமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு திமுக முகாமுக்கு மாறினார். கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்ததால், அவர் மட்டும் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பழனியப்பன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேர் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இங்கு ஏராளமானோர் திமுகவில் இணைந்துள்ளனர். குறிப்பாக அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் தங்களை ஒப்படைத்துக் கொள்ள ஏறக்குறைய 2,000 பேர் இங்கே வந்துள்ளார்கள்.

நம்முடைய பழனியப்பன் இங்கு பேசும்போது ஒன்றை குறிப்பிட்டு சொன்னார். திமுகவுக்கு கொஞ்சம் லேட்டாக வந்துள்ளேன் என்று பழனியப்பன் கூறினார். அவருக்கு ஒன்றை சொல்கிறேன். நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வசனம் உங்களுக்குத் தெரியும்.  அதன்படி பழனியப்பன் 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கிறார்'. ரொம்ப நாளா அவர் மீது நான் கண் வைத்தது உண்டு.  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அமைச்சரவையில் அவரை உற்று கவனித்துக்கொண்டிருப்பேன். சட்டப்பேரவையில் வேண்டுமென்றே சில அதிமுக அமைச்சர்கள் எங்களுக்கு கோபம் வரவேண்டும், வெறுப்பு வரவேண்டும் என்று திட்டமிட்டு பேசுவார்கள்.

அதாவது, நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசுவார்கள். ஒரு நான்கைந்து அமைச்சர்கள் எந்தப் பிரச்சனைக்கும் வரமாட்டார்கள். அரசின் திட்டங்கள், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் என அதைப் பற்றி மட்டும் பேசுவார்கள். அப்படி சில அமைச்சர்கள் அங்கு இருந்தார்கள். அதையெல்லாம் நான் மறுக்கமாட்டேன். அப்படி இருந்தவர்களில் முதல் ஆள் பழனியப்பன். சில அமைச்சர்கள் தரம் தாழ்த்து பேசும்போது, அதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்வோம். ஆனால், பழனியப்பன் பேசியபோது முழுமையாகக் கேட்டுவிட்டுதான் செல்வோம்.

அவரை திமுகவில் எப்படியும் சேர்க்க வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்தோம். எவ்வளவோ யார் யாரையோ தூதுவிட்டோம். ஆனால், அந்தச் சூழலில் பழனியப்பனால் இங்கு வர முடியவில்லை. இப்பொழுது எனது விருப்பத்தை ஏற்று இங்கு வந்துள்ளார். அவரை நான் வரவேற்கிறேன். தருமபுரி மாவட்டத்தை வீக் வீக் என்று கழக தோழர்கள் சொல்வார்கள். இனி தருமபுரி மாவட்டத்தை வீக் என்று யாரும் சொல்லக் கூடாது. சொல்லவும் முடியாது” என்று மு.க. ஸ்டாலின் பேசினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!