
4 ஆண்டுகள் ஆகியும், லோக்பால் அமைப்பு ஏற்படுத்தவில்லை....மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
லோக்பால் சட்டம் நிறைவேறி நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் லோக்பால் அமைப்பும், தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
2013-ல் சட்டம்
லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை 2013ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்துவிட்டது. ஆனால், அதன்பின் பொறுப்பு ஏற்ற பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு இன்னும் லோக்பால் அமைப்பையும் உருவாக்காமல், தலைவர், உறுப்பினர்களை நியமிக்காமல் இருந்து வருகிறது.
எதிர்க்கட்சி இல்லை
லோக்பால் அமைப்பின் தலைவர்களையும், உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் இடம் பெற வேண்டும். ஆனால், இப்போதுள்ள நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் எந்த கட்சியும் இல்லை.
காலம் தாழ்த்தல்
இந்நிலையில் அதற்கு ஏற்றார்போல் சட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் அல்லது மக்களவையில் எதிர்க்கட்சிகளில் மிகப்பெரிய கட்சி என்று திருத்த வேண்டும். இது தொடர்பாக புதிய சட்டம் இயற்றவும், அல்லது சட்டத்தை திருத்தவும் உச்ச நீதிமன்றம் அறிவறுத்தியும் மத்திய அரசுசெயல்படுத்தாமல் இருக்கிறது.
கடும் குற்றச்சாட்டு
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று கருத்து பதிவிட்டு இருந்தார். அவர் கூறியிருப்பதாவது-
லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால், இன்னும் லோக்பால்அமைக்கப்படவில்லை. எப்போது வரை இந்த தவறை தொடர்ந்து செய்வீர்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.