வந்துட்டு சும்மதான் போனாங்க! அமலாக்கத்துறையை அசால்ட்டாக வீட்டுக்கு அனுப்பிய ப.சிதம்பரம்!

First Published Jan 13, 2018, 12:52 PM IST
Highlights
No documents were confiscated in the IT Raid - P. Chidambaram explanation


தனது வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், எந்தவித ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் ப.சிதம்பரம் வீட்டில் தான் அவரது மகன் கார்த்திக் சிதம்பரமும் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியிலிருந்து ப.சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

2006 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த சோதனை குறித்து கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் நடராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமலாக்கத்துறையின் கூடுதல் இயக்குநரின் உத்தரவின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். அமலாக்கத்துறை சோதனையின்போது எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றார். காலை வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சும்மாவே அமர்ந்திருந்ததாகவும், யாரிடமும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் அருண் நடராஜன் கூறினார்.

இந்த நிலையில், ப. சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது நேற்று உச்சநீதிமன்றம் என் மகன் கார்த்தி தாக்கல் செய்த வழக்கில், எதிர் தரப்பு பதில் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஜனவரி 30 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதில் முக்கியமாக எவ்வித FIR-ம் சிபிஐ அல்லது எவ்வித விசாரணை அமைப்பாலும் போடப்படவில்லை. இதன் மூலம் அவர்கள் கூறுவதுபோல எவ்வித குற்றச்செயல்களும் நடைபெற வில்லை என்பது ஊர்ஜிதமாகிறது. இதன் காரணமாக அமலாக்கத்துறை இதில் விசாரணை நடத்த இயலாது.  இதுதான் உச்சநீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று  இது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களை மறைக்கடிக்கவே சென்னையில் இது தொடர்பாக சோதனைகளை நடத்தியுள்ளனர். என் மகன் கார்த்திக் ஊரில் இல்லை. என்னிடம் சோதனை மேற்கொள்ளலாமா ? என்று கேட்டார்கள். நானும் நீங்கள் சோதனை நடத்துங்கள், ஆனால் அதற்கான எதிர்ப்பை நான் தெரிவிப்பேன் என்றேன்.

வீட்டில் சமையல் அறை மற்றும் இதர அறைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இதற்கு முன்பு மூன்று முறை சென்னையில் உள்ள இல்லத்தில் சோதனைகள் நடைபெற்றுள்ளன. மூன்று முறையும் எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. அதிகாரிகள் அவர்களுடைய கடமையை செய்தார்கள். காலை 11 மணிக்கு சோதனையை முடித்தார்கள். இது தொடர்பான வழக்கு ஜனவரி 30 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது'' என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

click me!