20 தொகுதிகளுக்கும் இப்போதைக்கு இடைத் தேர்தல் இல்லை !! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Nov 27, 2018, 7:58 AM IST
Highlights

கஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் .பி.ராவத் தெரிவித்தார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மற்றும் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவையடுத்து திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆயிக தொகுதிகள் காலியாக உள்ளன.  இந்த 2 தொகுதிகளுக்கும் நடக்க இருந்த இடைத்தேர்தல், பருவமழையை காரணம் காட்டி ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே தகுதி நீக்க வழக்கில் அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கடந்த மாதம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, இந்த தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் .

இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம்  காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தல் நடத்தப்பட்டால், ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைக்க குறைந்தபட்சம் 6 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்னும் நிலை காணப்படுகிறது. இதனால் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்துமே ஆவலுடன் காத்திருக்கின்றன.

இது தொடர்பாக அண்மையில் பேசிய  தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத், தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி இரவு தமிழகத்தின் 12 மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிந்துபோனது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. எனினும் கஜா புயலின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், எப்போது தேர்தல் தேதி குறித்து ஆலோசித்தாலும், திருவிழாக்கள், இயற்கை பேரிடர்கள், பொதுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றை கணக் கிட்டே முடிவு செய்வோம். புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த பின்னரே இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்..

அரசியல் சாசனப்படி, 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டும். ஆனால் இடைத்தேர்தல் நடத்துவதற்கு முன்பு இதையெல்லாம் கணக் கில் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.

click me!