பேனர் வைத்தால் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்... திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Sep 13, 2019, 1:23 PM IST
Highlights

திமுக நிகழ்ச்சிகளுக்காக எவ்வித பேனர்களும், கட் அவுட்களும் இனி வைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். 

திமுக நிகழ்ச்சிகளுக்காக எவ்வித பேனர்களும், கட் அவுட்களும் இனி வைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று உயிரிழந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, ஒரு மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் போனது உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா ? அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக ஏன் இருந்தனர். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தை குடிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர். இன்னும் எத்ததை உயிர்களை பலி வாங்க துடிக்கின்றனர். மேலும், பேனர் வைக்க கூடாது என மு.க.ஸ்டாலின் கூறினாலும் மக்களிடம் அதை ஏன் கொண்டு செல்லவில்லை? எனவும் வினவியுள்ளனர். 

இந்நிலையில், திமுக நிகழ்ச்சிக்காக, கட்சியினர் யாரும் பேனர் வைக்கக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அ.தி.மு.க.வினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

 திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்.

 

பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் - மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

ஆகவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைக் கழக, மாவட்டக் கழக, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

click me!