
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வேலையில் பிஸியாகி உள்ளன. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரட்டை சிலை சின்னத்தில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பாஜகவுடன் இணக்கமானதால், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினராக இருந்தபோதும், அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அதிமுகவுடனான உறவு குறித்து தமிமுன் அன்சாரி தெளிவுப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். இதை ஏற்கெனவே அறிவித்தும் இருக்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது தமிழக நலன்களையும், தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஆளுமையாக அவர் இருந்தார். இன்றைய அதிமுக தலைமை, ஜெயலலிதா நிலைப்பாட்டில் இருந்து மாறி மோடி, அமித்ஷாவையும், மத்திய அரசையும் சார்ந்து சிந்திக்கக்கூடிய நிலையாக மாறி விட்டது. தமிழர் நலன், தமிழக நலனை விட்டுக்கொடுக்கும் போக்கு அவர்களிடம் உள்ளது. இந்தக் காரணங்களால்தான் நான் கடுமையாக முரண்படுகிறேன். அதிமுகவை எதிர்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.