
நிஃபா வைரஸ் காய்ச்சல் பரவ காரணமாக கூறப்படும் வௌவால் கிணற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த கிணற்றில் இருந்த வௌவால் ஒன்றை பிடித்து புனே ஆய்வு மையத்துக்கு கேரள சுகாதாரத் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்
கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிஃபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த மாவட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நிஃபா வைரஸ் காய்ச்சல் என்பது நிஃபா வைரசால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றிகள் மூலம் மனிதனுக்கு பரவுகிறது. இந்த காய்ச்சல் 1998-ம் ஆண்டு மலேசிய நாட்டில் உள்ள நிஃபா என்ற பகுதியில் இருந்து பரவியதால் நிஃபா என்று அழைக்கப்படுகிறது.
நிஃபா வைரசால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வாலின் எச்சம், சீறுநீர் மூலமும் பன்றிகள் மூலமும் மனிதனுக்கு பரவுகிறது. டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை போல இந்த காய்ச்சல் வேகமாக பரவாது.
அதே நேரத்தில் வவ்வாலின் எச்சம் மற்றும் சீறுநீர் உணவு பொருள் மற்றும் தண்ணீர் மீது படும்போது அதனை மனிதன் தெரியாமல் சாப்பிடுவதால் பரவுகிறது. நிஃபா வைரசுக்கு இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் அளவுக்கு அதிகமான வெப்பம், மற்றும் கடுமையான தலைவலி ஏற்படும். பின்னர் ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையை பாதித்து மரணம் ஏற்படும்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஏராளமான வௌவால்கள் குடியிருந்தன. அந்த வௌவால்கள், அங்குள்ள தோட்டத்தில் உள்ள பழங்களை கடித்திருக்கிறது. அந்த பழங்களை உண்ட தோட்டத்து உரிமையாளர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நிஃபா வைரஸ் காய்ச்சலார் மரணமடைந்துள்ளனர். அவர்கள் மூலமாகத்தான் நிஃபா பரவியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த கிணற்றை வலை போட்டு மூடி வைத்துள்ள கேரள சுகாதாரத்துறையினர், அங்கிருந்த வௌவால் ஒன்றை பிடித்து புனே ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அந்த மரண கிணற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.