
கடந்த 1994ம் ஆண்டு அண்ணாமலை திரைப்படம் வெளியானது. அதில், வரும் ஒரு காட்சியில் அமைச்சரை கண்டித்து ரஜினி பேசுவார். இந்த வசனம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவார் என பரவலாக பேசப்பட்டது.
இதை தொடர்ந்து பாட்ஷா படம் அவரை அரசியலில் ஈடுபட செய்தது. பின்னர், 1996ம் ஆண்டு திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியால், அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டது.
இதை தொடர்ந்து பல படங்களில் சரவெடியான அரசியல் வசனங்களை ரஜினி பேசி வந்தார். இதற்கிடையில், ரஜினிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், அவர் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி வந்தார்.
கடந்த 2003ம் ஆண்டு பாபா படத்தில், முழுக்க முழுக்க முதலமைச்சர் பதவிக்கான கதையாகவே இருந்தது. இதனால், அவரை அரசியலுக்கு வரவேண்டும் என ரஜினியின் ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
விரைவில் வெளியாக உள்ள 2.0 படம் பற்றி கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவற்றில் பல்வேறு செய்திகள் வெளியானது.
சமீபத்தில் லைகா நிறுவனம் சார்பில், இலங்கையில் கட்டப்பட்ட வீடுகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ரஜினி செல்ல இருந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பயணத்தை ரத்து செய்தார். இதையொட்டி ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க இருந்ததும், ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் காலூன்ற முடியாமல் உள்ளன. இதனால், ரஜினியை வைத்து, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
தற்போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து அடுத்த குடியரசு தலைவராக மோகன் பகவத், அத்வானி, வாஜ்பாய் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ரஜினியின் பெயரும் பரசீலனையில் உள்ளதாக வாட்ஸ்அப், பேஸ்புக் உள்பட சமூக வலைதளங்களில் செய்திகள் வைலாக பரவி வருகின்றன.