
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் இரண்டாக பிளவு பட்டது. அதன்பிறகு நடந்த அரசியல் குடுமிப் பிடியில் சசிகலா குடும்பம் அ.தி.மு.க-வை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டது.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் வசம் அ.தி.மு.க சென்றதுடன் அதன் ஒருங்கிணைப்பாளர்களாக அவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, அ.தி.மு.க-வின் செய்தித்தாளாக இருந்துவந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டாலும், அந்த நாளிதழின் வெளியிட்டாளர் என்ற பொறுப்பு சசிகலாவிடம் தான் இருந்தது.
அதேபோல, ஜெயா டி.வி-யும் சசிகலாவின் உறவினர்கள் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது . சொத்துக்குவிப்பு சசிகலா சிறைக்குச் சென்றபிறகு, இதனை அவர்களது உறவினர்கள் கவனித்து வருகின்றனர்.
இதனால் அதிமுக சார்பில் தனி நாளேடு மற்றும் தொலைக்காட்சி சேனல் தொடங்க அதிமுக சார்பில் முடிவு செய்யப்பட்டது.
.அதன்படி சில மாதங்களுக்கு முன்பு `நமது அம்மா' நாளிதழ் தொடங்கப்பட்டது. இதையடுத்து விரைவில் செய்திச் சேனல் தொடங்கப்படவுள்ளது. இதற்கு `நியூஸ் ஜெ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சேனல் தொடங்குவதற்கான வேலைகள் மும்மராக நடந்து வருகிறது. இதற்கிடையே, சேனல் தொடங்குவதற்கு முன்பாக `நியூஸ் ஜெ' லோகோ, மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் வெளியிடப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் அன்று மாலை 6 மணிக்கு விழா நடைபெறவுள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இதனைத் தொடங்கி வைக்கின்றனர்.