இன்னும் ஒரே வாரம்தான்… பேரறிவாளன் உட்பட 7 பேரும் விடுதலை !! நாளை அமைச்சரவையில் முடிவு !

By Selvanayagam PFirst Published Sep 8, 2018, 7:36 AM IST
Highlights

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று தீர்ப்பையடுத்து  அவர்கள் விடுதலை செயவது குறித்து தமிழக அமைச்சரவை நாளை கூடி முடிவு செய்ய உள்ளது.


 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தினார்கள்.



அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை வரவேற்று உள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.



சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது மகன் விடுதலை தொடர்பாக முதலமைச்சரை  சந்திக்க இருப்பதாக கூறி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, இந்த பிரச்சினையில் அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும விடுதலை செய்வது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும், பின்னர் அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

click me!