லஞ்சம் வாங்குவதற்காகவே தனி அலுவலகம் … 37 படித்த இளைஞர்களை பணியமர்த்தி மாஸ் காட்டிய அரசு அதிகாரி..

By Selvanayagam PFirst Published Sep 8, 2018, 6:58 AM IST
Highlights

வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குநர் சுப்ரமணியம் என்பவர் லஞ்சம் வாங்குவதற்காகவே மாத வாடகை 8 ஆயிரம் ரூபாய்க்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து  தனி அலுவலகம் நடத்தி வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. அதில் 37 படித்த இளைஞர்களும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரும் பணியாற்றியது  விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பழைய முருகன் தியேட்டர் பகுதியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை இயக்குனராக சுப்பிரமணியன் கடந்த 1½ ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்த அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெற்று வருவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் தனிப்படையினர் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அலுவலகத்திற்குள் இருந்து ஊழியர்கள் வெளியே யாரும் செல்லாத வகையிலும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லாத வகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சோதனையில் சுப்பிரமணியன் உள்பட 11 அலுவலக ஊழியர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் அதுகுறித்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியது. சுப்பிரமணியன் வேலூர் வள்ளலார் டபுள்ரோடு விவேகானந்தர் முதல் தெருவில் வாடகைக்கு 8 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலக பணிகளை தனியாக மேற்கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த வீட்டை சுப்பிரமணியன் தனி அலுவலகமாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டில் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்



அந்த அலுவலகத்தில்  படித்த இளைஞர்கள் 37 பேரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் சம்பளம் கொடுத்துள்ளார். மேலும் ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியையும் வேலைக்கு அமர்த்தி உள்ளார். அவருக்கு மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார்.

சுப்பிரமணியன் அலுவலக பணிகளை இந்த வீட்டில் முறைகேடாக நடத்தி  இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே இது போன்று லஞ்சம் வாங்குவதற்காகவே ஒரு அலுவலகத்தை நடத்தியிருப்பது முதல் முறை என போலீசார் தெரிவித்தனர்.

click me!