அன்புமணிக்கு புதிய பதவி... டார்க்கெட் 2026... படபடக்கும் பாமக..!

By Thiraviaraj RMFirst Published Nov 27, 2021, 3:59 PM IST
Highlights

2026 சட்டமன்றத்தேர்தலில் அன்புமணியை வெற்றி பெற வைக்க இப்போதே அஸ்திவாரம் அமைக்கப்பட்டு வருகிறது.

60 எம்.எல்.ஏ.,க்களை வெற்றிபெற வைத்து அன்புமணி ராமதாஸை முதல்வராக்கியே தீரவேண்டும் என்கிற தீராத வேட்கையில் இருக்கிறார் ராமதாஸ். அதற்காக தொண்டர்களை உசுப்பேற்றும் வகையில் பேசி வருகிறார். இந்நிலையில், பா.ம.க.,வை பலப்படுத்துவதற்காக அக்கட்சியின் மாநில தலைவர் அல்லது செயல் தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.

விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பதவியை கணிசமாக கைப்பற்ற பா.ம.க., திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சந்தித்து, ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

'2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அன்புமணியை முதல்வராக்க வேண்டும்' என்ற கோஷத்துடன், கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சும் வகையில், புதிய நிர்வாகிகளையும் ராமதாஸ் நியமித்து வருகிறார். சரியாக வேலை செய்யாத நிர்வாகிகளை நீக்கி விட்டு மாடுமேய்க்கும் பையனுக்கு பொறுப்புக்கொடுத்து கட்சி வேலை பார்க்க வைப்பேன் என்கிறார் ராமதாஸ். 

புதிய மாவட்ட செயலர்கள் பட்டியலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளதோடு, சமூக நீதியை பிரதிபலிக்கும் வகையில், மற்ற ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலர் பதவி, பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் அய்யர் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநில, மாவட்ட, நகர, பேரூராட்சி, ஒன்றிய கிராமம் வாரியாக புதிய நிர்வாகிகளை நியமித்த பின், கட்சியின் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் அல்லது ஜனவரியில் நடத்தப்பட உள்ளது. அப்போது, சட்டசபை பா.ம.க., தலைவராக ஜி.கே.மணி இருப்பதால், அவர் வகிக்கும் மாநில தலைவர் பதவி, இளைஞரணி தலைவராக இருக்கும் அன்புமணிக்கு வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது. 

கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறுவதற்கு, ஓட்டெடுப்பு நடத்தி, அன்புமணிக்கு பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் அன்புமணியை வெற்றி பெற வைக்க இப்போதே அஸ்திவாரம் அமைக்கப்பட்டு வருகிறது.

click me!