புதிய கல்வி கொள்கை புதுச்சேரி மாநிலத்திற்கு எந்த பயனும் இல்லை.! கடுகடுக்கும் முதல்வர் நாராயணசாமி

By T BalamurukanFirst Published Aug 2, 2020, 11:13 PM IST
Highlights

மத்திய அரசு தேசிய கல்வி கொள்கைக்கான புதிய கல்வி கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதனால் புதுச்சேரியில் மாற்றங்கள் ஏற்படாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 

மத்திய அரசு தேசிய கல்வி கொள்கைக்கான புதிய கல்வி கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதனால் புதுச்சேரியில் மாற்றங்கள் ஏற்படாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அதன்பின் கடந்த 1986-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அடுத்தாற்போல் 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டாலும் பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை. அதன்பின் கடந்த 2016-ம் ஆண்டு மே 27-ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. அதன் 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்துள்ளது.இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.

இத்திட்டம் குறித்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி பேசும் போது... 

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கை பல குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. பல மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால், வேத பாடசாலை திட்டத்தைக் கொண்டு வருகின்றனர். குலக் கல்வியைக் கொண்டு வர விரும்புகின்றனர். கட்டாய மொழியாக மும்மொழித் திட்டம் வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி புதிய கல்விக் கொள்கையானது வேலையை நோக்கிச் செல்கிறது என்று சொல்கின்றனர். ஆனால் அதனை முழுமையாகப் படித்துப் பார்க்கும்போது மக்களுக்குப் பயன்படுகின்ற திட்டத்தைக் கொடுக்காததாக இருக்கிறது. வடமாநிலங்களைப் போன்று தென்மாநிலங்கள் இல்லை.

புதுச்சேரி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலம். புதுச்சேரி மாநிலம் கல்வி கேந்திரமாக இருக்கிறது. நம்முடைய பாடத்திட்டங்கள், கல்விக் கொள்கைகள் எல்லாம் வேலைவாய்ப்பை நோக்கிச் செல்கிறது. புதுச்சேரியை சேர்ந்த பல ஆயிரம் மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சமூகவியல் உள்ளிட்ட பல துறைகளில் தேர்ச்சி பெற்று பல துறைகளில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு நம்முடைய மாநிலத்தில் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு கிடைத்துப் பயன் பெறுகின்றனர்.

இந்தப் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருவதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. ஆனால், மத்திய அரசானது இதற்கான நிதியை எங்கிருந்து கொண்டு வரப்போகின்றது. மாநிலங்களின் மீது சுமத்தப் போகின்றனரா? என்பது தெளிவுபடக் கூறப்படவில்லை.கட்டாயக் கல்வி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பில் இருந்து பல்கலைக்கழக கல்வி வரை நாம் இலவசக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். மத்திய அரசு இப்போதுதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருகின்றனர்.

12 ஆம் வகுப்புவரைதான் கட்டாயக் கல்வி என்று கூறுகின்றனர். அதுபோல் வகுப்பு கட்டணத்தை 12 ஆம் வகுப்பு வரைதான் அறிவித்துள்ளனர். ஆனால், நாம் ஏற்கெனவே கல்லூரிப் படிப்பு வரை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். ஆகவே, புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசின் திட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. அதுமட்டுமின்றி சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு மத்திய அரசு முனைகிறது. இந்திய நாட்டில் பல கலாச்சாரம், பல மொழிகள், மதங்கள் இருக்கும்போது மாநிலத்துக்கு ஏற்றாற்போல் கல்விக்கொள்கை இருக்க வேண்டுமே தவிர மத்திய அரசு விரும்புவது போல் அது இருக்கக்கூடாது.

இது சம்பந்தமாக நடைபெற்ற கல்வியமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் கமலக்கண்ணன் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து புதுச்சேரி மாநில அரசின் நிலையை தெளிவாகக் கூறியுள்ளார். எங்கள் மாநில அரசின் திட்டமானது இருமொழிக் கொள்கையாக இருக்க வேண்டும். தாய்மொழியாக தமிழும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்க வேண்டும். இந்தியை விருப்பப்பட்டால் படிக்கலாம் என்று கூறியுள்ளோமே தவிர இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்கக்கூடாது என்பது எங்கள் அரசின் கொள்கை. அது மக்களின் விருப்பம். ஆகவே, மத்திய அரசு இந்தியைத் திணிப்பதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புதுச்சேரி மாநிலத்துக்கு என்று தனி பாரம்பரியம் இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 5 அரசு அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை நாம் மக்களுக்கு கொடுத்துள்ளோம். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி.

ஏற்கெனவே பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காலத்தால் பிரெஞ்சு பத்திரங்கள், பிரெஞ்சு சட்டங்கள் நடைமுறையில் இருப்பதால் பிரெஞ்சு மொழியையும் நம்முடைய ஆட்சி மொழியாக வைத்துள்ளோம். ஆகவே மற்ற மாநிலங்களைக் காட்டிலும் புதுச்சேரி தனித்தன்மை வாய்ந்த மாநிலம். மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மக்களின் கருத்துகளைக் கேட்டு புதிய கல்விக் கொள்கை தொடர்பாக எங்களுடைய கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிப்போம். அது சம்பந்தமான விவாதத்தை அமைச்சரவையில் வைத்துப் பேச நடவடிக்கை எடுக்கிறோம். புதிய கல்விக் கொள்கை சம்பந்தமான விரிவான அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன் பிறகு இது சம்பந்தமாக மாநில அரசு முடிவு எடுக்கும்.

இப்போது கொரோனா தொற்றுக் காலத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பாடங்கள் ஆன்லைன் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையான இப்போது இருக்கின்ற சூழ்நிலையையொட்டி இருக்க வேண்டும். பொதுவாக அனைத்து மாணவர்களும் பள்ளி, கல்லூரிக்குச் சென்று படிப்பதற்கு ஏதுவாக இல்லாதபோது மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவி செய்ய வேண்டும். மாணவர்கள் காணொலி காட்சிகள் மூலம் படிப்பதற்கான வசதிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும்''.
 

click me!