நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு … பிரிவினைவாத பேச்சு பேசிய நெல்லை கண்ணன்..!

By Selvanayagam PFirst Published Dec 31, 2019, 9:11 AM IST
Highlights


நெல்லையில் நடைபெற்ற குடியுரிமை எதிர்ப்பு மாநாட்டில் பேசிய காங்கிரஸ் பிரமுகர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசியதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பிரிவினைவாத பேச்சு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நெல்லை கண்ணன் தமிழகத்தில் உள்ள சமய சொற்பொழிவாளர்களுள் முக்கயிமானவராக கருதப்படுகிறார். ஆனால் அவரது பேச்சில் எப்போதுமே நாகரீகம் இருந்தது கிடையாது. யாராக இருந்தாலும் அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேசுவதோடு மட்டுமல்லாமல் தன்னைவிட புத்திசாலி வேறு யாரும் கிடையாது என்கிற ரீதியில் பேசுவார். 

மேலும் தனது ராமாயண சொற்பொழிவில் ராமன், ராவணன் உள்ளிட்ட பாத்திரங்களையும்  அவன் இவன் என்றுதான் சொல்லுவார். அண்மையில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை  அவன், இவன் என்று ஒரு பேட்டியில்  மரியாதைக்குறைவாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் தான் நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தில் தவ்ஹித் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் நெல்லை கண்ணன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

நெல்லை கண்ணன் பேசும்போது, மோடி தான் பிரதமர். அவர் ஒரு மு…. . ஆனால் அமித் ஷாதான் அவருக்கு மூளை. சண்டியனே அமித் ஷாதான். அமித் ஷா சோலி முடிஞ்சிடுச்சுன்னா, மோடிசோலியும் முடிஞ்சுடுச்சு. 

அது ஒரு பக்கம். நீங்க ஒருத்தனும் முடிக்க மாட்டேங்கிறீர்களே என்று அங்கு திரண்டிருந்த இஸ்லாமிய மக்களைப் பார்த்து கொலை வெறியைத் தூண்டும் வகையில் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், . நீங்க ஏதாச்சும் பண்ணுவீங்கனு நானும் நினைச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஒண்ணும் நடக்கமாட்டேங்குது. ஒரு சாயுபும் பண்ணித் தரமாட்டேங்குதான்” என்று பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் அராஜகமாக பேசினார்.

தற்போது நெல்லை கண்ணனிம் வன்முறைப் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கொலை செய்யத் தூண்டும் வகையில் அவரது பேச்சு இருந்ததாகவும், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று மாலைக்குள் நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!