புதுவையில் ஊசலாடுது நாராயணசாமி ஆட்சி.. எனர்ஜி டானிக் ஊட்ட வருகிறார் ராகுல்.. தம் பிடித்து பேசும் அழகிரி.

By Ezhilarasan BabuFirst Published Feb 16, 2021, 3:49 PM IST
Highlights

புதுச்சேரி மாநிலத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருவது அங்கே மிகப்பெரிய எழுச்சியையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி அவர்கள் விடுக்கும் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம்: தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இரண்டு கட்டமாக மக்களை சந்தித்து உரையாடிய சுற்றுப் பயண நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடைபெற்று, தமிழக மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இதையொட்டி, அண்டை மாநிலமான புதுச்சேரியில், நாளை மாலை 3 மணியளவில் ரோடியர் மில் மைதானத்தில் நடைபெறுகிற மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றுகிறார். தமிழகமும், புதுச்சேரியும் வெவ்வேறு மாநிலங்களாக இருந்தாலும், இரண்டு மாநிலங்களையும் பிரித்து பார்க்க முடியாத வகையில் மக்களின் வாழ்க்கை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாகும். 

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைந்தது முதற்கொண்டு அந்த ஆட்சியை சீர்குலைப்பதற்கு எதிர்கட்சிகள் முயற்சி செய்தால் அதை எதிர்கொண்டு முறியடித்து காட்ட முடியும். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்டிருக்கிற ஆளுநர் கிரண்பேடி தமக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக கற்பனையாகக் கருதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் நாள்தோறும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதை எதிர்த்து, ஆளுநர் மாளிகை முன்பாக அம்மாநிலத்தின் முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் இரவு, பகல் பாராமல் அங்கேயே படுத்து உறங்கி போராட்டம் நடத்திய காட்சியை நாட்டு மக்கள் பார்த்தார்கள். இதைவிட ஜனநாயகத்திற்கு தலை குனிவை பா.ஜ.க.வால் ஏற்படுத்த முடியாது. ஆளுநர் கிரண்பேடியால் எடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்க்கிற முயற்சியில்பா.ஜ.க. ஈடுபட்டுவருகிறது.  

இதையெல்லாம் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முறியடித்து ஆட்சியை பாதுகாத்து வந்தது. மத்திய பா.ஜ.க.வின் அடக்குமுறையினாலும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளினாலும் கடுமையான எதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிற புதுச்சேரி மாநிலத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருவது அங்கே மிகப்பெரிய எழுச்சியையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைவர் ராகுல்காந்தி புதுச்சேரிக்கு வருகை புரிந்து பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத செயல்களை தோலுரித்துக் காட்ட இருக்கிறார். 

எனவே, இந்தப் பின்னணியில் புதுச்சேரியில் நடைபெறுகிற தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பொதுக் கூட்டத்திற்கு, அண்டை மாவட்டங்களாக இருக்கிற கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் பார் சிறுத்ததோ, படை பெறுத்ததோ என்பதை உணர்த்துகிற வகையில் அணி அணியாக வாருங்கள், அலை அலையாக வாருங்கள்,  காங்கிரஸ் தோழர்களே, புதுச்சேரிக்கு அணி திரண்டு வாருங்கள், தலைவர் ராகுல்காந்தி உரையை கேட்டு எழுச்சி பெறுங்கள் என உங்களை அன்போடு அழைக்கிறேன். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!