பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மேல் நடவடிக்கை எடு...!! பிறகு குடிசைவாழ் மக்களை அகற்று... நெருப்பாய் கொதிக்கும் சீமான்...!!

Published : Dec 30, 2019, 04:19 PM IST
பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மேல் நடவடிக்கை எடு...!! பிறகு குடிசைவாழ் மக்களை அகற்று...  நெருப்பாய் கொதிக்கும் சீமான்...!!

சுருக்கம்

ஆதித்தமிழர்களுக்கென வெள்ளையர் காலத்தில் அளிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அவர்கள் வசம் இருந்திருந்தால் அவர்கள் ஏன் இந்நிலத்தில் வாழப் போகிறார்கள்?  இம்மக்களை ஆக்கிரமிப்பாளர்களென்று கூறி அவர்களது குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்துகிற அரசு, 

மண்ணின் மக்களை பூர்வீக நிலத்தைவிட்டு வெளியேற்றுவதுதான் பெருநகர வளர்ச்சியா என அரசுக்கு  கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,    சத்தியவாணி முத்து நகர் மக்கள் அப்புறப்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் :-  சென்னை, அண்ணாசாலையில் இருக்கும் சத்தியவாணி முத்து நகரில் வசித்து வருகிற மண்ணின் மக்களை அவர்களின் விருப்பத்திற்கும், உணர்வுக்கும் மாறாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி அகற்றி சென்னைக்கு வெளியே ஒதுக்குபுறமாகத் தள்ள முனையும் தமிழக அரசின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. 

சென்னையின் பூர்வக்குடி மக்களை அவர்களது வாழ்விடத்தைவிட்டு முழுவதுமாக வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க முனைகிற கொடுஞ்செயலைத் தமிழக அரசு தொடர்ச்சியாகச் செய்துவருவது மிகப்பெரும் கொடுஞ்செயலாகும்.  இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. பெருநகர வளர்ச்சி என்கிற பெயரில் மண்ணின் மக்களை நிலத்தைவிட்டு வெளியேற்றிவிட்டு, வடமாநிலத்தவர்களைக் குடியேற்றி தமிழர் அல்லாதோரின் ஆதிக்கத்தை வளர்த்து விடுகிற இப்போக்கு பேராபத்தானதாகும். 

காலங்காலமாக வாழ்ந்து வருகிற மக்களை, ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ எனக்கூறி அப்புறப்படுத்த முனைகிறது அரசு. ஆதித்தமிழர்களுக்கென வெள்ளையர் காலத்தில் அளிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அவர்கள் வசம் இருந்திருந்தால் அவர்கள் ஏன் இந்நிலத்தில் வாழப் போகிறார்கள்?  இம்மக்களை ஆக்கிரமிப்பாளர்களென்று கூறி அவர்களது குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்துகிற அரசு, அதே போல பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்களையும் அப்புறப்படுத்தி அந்நிலங்களை மீட்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க முயலுமா? எனும் கேள்விக்கு இதுவரை பதிலிலில்லை.

ஓரிரு ஆண்டுக்கு முன்பு சாலை விரிவாக்கப்பணி என்று சொல்லி எண்ணூர் விரைவுச்சாலையில் கடற்கரையோரம் இருந்த வீடுகளையெல்லாம் இடித்துவிட்டு அங்கிருந்த மக்களை அவ்விடத்தைவிட்டு வெளியேற்றினார்கள். சிந்தாதிரிப்பேட்டை, ஐந்து குடிசைப்பகுதியிலுள்ள மக்களை அப்புறப்படுத்தி வெளியேற்றினார்கள். அதனைப் போலவே, தற்போது சத்தியவாணி முத்து நகரில் வாழும் பூர்வக்குடிகளையும் காவல்துறையின் துணையோடு அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தி வெளியேற்ற முனைகிறார்கள். அவ்வாறு வெளியேற்றப்படும் மக்கள் கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். 

சத்தியவாணி முத்து நகரில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பிற்காக மக்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தமிழக அரசு கூறியிருந்தாலும் இது போதுமானதல்ல! வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும் பணியினை முழுமையாகக் கைவிட்டு, அவர்களது வாழ்விடத்திற்கு அருகாமையிலே மாற்றுக்குடியிருப்புகளை ஏற்படுத்தித் தந்து அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கோருகிறேன்.

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!