
அதோ, இதோ என்று அரசியல் போக்கு காட்டி வந்த நடிகர் ரஜினி, வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி, அதாவது சுதந்திர தினத்தன்று புது கட்சி தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1996 ம் ஆண்டு முதல் ரஜினி அரசியலில் அவ்வப்போது குரல்கொடுத்து வந்தாலும், அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக எதுவும் கூறாமலே இருந்தார்.
ஆனால், ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் ஓய்வு ஆகியவை, அவரது அரசியல் பிரவேசத்திற்கு, முக்கிய காரணம் ஆகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகழ்ச்சியின் போதும் அதை அவர் மேலோட்டமாக கூறினார்.
இந்நிலையில், அவர் வரும் சுதந்திர தினத்தன்று, புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளார் என்றும். கட்சி கொடி, சின்னம் ஆகியவற்றின் வடிவமைப்பு பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நடிகை மீனா, நமீதா ஆகிய நடிகைகள், நடிகர் ரஜினிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், கட்சியில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன், அதிமுக, திமுக, தமாகா, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் பலரும், ரஜினி கட்சி தொடங்கும்போது, அதில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்.
இதையடுத்து, மற்ற கட்சிகளில் உள்ள ரஜினி ரசிகர்கள், ரஜினி அனுதாபிகள், ஓரம் கட்டப்பட்ட முக்கிய பிரமுகர்களை, அந்தந்த கட்சிகளின் தலைமை தீவிரமாக கண்காணித்து வருகிறது.