
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ க்களில், அதிக அளவு மக்கள் வெறுப்புக்கு இலக்காகி, தொகுதி மக்களால், அவமானப்படுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களில் முதன்மையானவர் நடிகர் கருணாஸ்.
போலீஸ் பாதுகாப்புடன் திருவாடானை தொகுதிக்கு சென்ற, அவரை மக்கள் விரட்டி அடித்ததில், அந்தப்பக்கமே சில நாட்கள் தலை காட்டாமல் இருந்தார்.
பின்னர், ஓரளவு இயல்பு திரும்பியுள்ள நிலையில், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியுடன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார் கருணாஸ்.
இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இரு அணிகளும், இணைந்து, மறந்த ஜெயலலிதாவின் செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியை சரியாக செயல்படுத்த இரு அணிகளும் இணைய வேண்டும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கட்டி காத்த கட்சி, ஆட்சி ஆகியவற்றை காப்பாற்ற இரு அணிகளும் இணைய வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே சமயம், அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, பதவி விலக வேண்டும், அவருடைய புகைப்படங்கள் அகற்றபட வேண்டும் என்ற கோரிக்கைகளில் இருந்து நான் முரண்படுகிறேன் என்றும் கருணாஸ் தெரிவித்தார்.
சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், அரசியலில் இருந்து முற்றிலும் அகற்றப்படவேண்டும் என்று பன்னீர் அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் அரசியலில் இருந்து விலக்கப்பட்டு விட்டனர் என்று எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் கூறி வந்தாலும், அதிமுக அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ க்கள், சசிகலா மற்றும் தினகரனை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலா அரசியலில் இருந்து விலகவேண்டும், அவரது படங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதில், தமக்கு உடன்பாடு இல்லை என்று நடிகர் கருணாஸ் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.