
ராஜஸ்தானில் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், கொள்ளையன் நாதுராமின் மனைவியை அம்மாநில போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாதுராம் விரைவில் கைது செய்யப்படுவான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார், கொள்ளை கும்பலை சுற்றி வளைத்த போது, கொள்ளை கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இஸ்பெக்டர் பெரிய பாண்டியனிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவரை நாதுராம் என்பவன் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பெரிய பாண்டியுடன் சென்ற இன்ஸ்பெக்டர் முனிசேகர்தான் தவறுதலாக பெரிய பாண்டியை சுட்டுக்கொன்றுவிட்டதாக தற்போது ராஜஸ்தான் போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தமிழக மற்றம் ராஜஸ்தான் மாநில போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலையாளி நாதுராமின் மனைவி மஞ்சுவை இன்று போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நாதுராமின் கூட்டாளி நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுனா, ராஜல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று கூறப்படுகிறது. பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட செங்கல்சூளை தேஜாராமுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்ததக்கது..