நாம் தமிழர் கட்சி பயங்கரவாத அமைப்பாக மாற வாய்ப்பு.. சீமான் குறித்து அதிர்ச்சி தகவலை தெரிவித்த KS.அழகிரி..!

By vinoth kumarFirst Published Oct 7, 2021, 4:38 PM IST
Highlights

அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்குப் புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்பட்டு வருகிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். 

சீமானின் வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான தீவிரவாத பாதைக்குச் செல்ல நேரிடும். ஆகையால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில்;- முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் படுகொலைக்குப் பிறகு 1991 இல் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பு எனக் கூறி, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகள்  தடை செய்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2014 இல் நீட்டிக்கப்பட்ட தடை 2019 இல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்கிற வகையில் நீதிபதி சங்கித்தா திங்கரா சேகல் தலைமையிலான தீர்ப்பாயம் பலரது கருத்துக் கேட்பிற்கு பிறகு மேலும் தடையை நீட்டித்து உறுதி செய்தது. இந்த தடை நீட்டிப்பிற்குக் காரணம் விடுதலைப் புலிகள் அமைப்பு வன்முறையிலும், சீர்குலைவு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்துகிற வகையில் செயல்படுவதாகத் தீர்ப்பாயம் உறுதி செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருவதையும் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், அன்னை சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது. இத்தகைய கூட்டங்களில் வன்முறையைத் தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற போக்கிலும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், துணிவிருந்தால் என் மீது காவல்துறை வழக்கு தொடுக்கட்டும், கைது செய்யட்டும், சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு சவால் விட்டுத் தொடர்ந்து பேசி வருகிறார். 

இதையும் படிங்க;- காதலனை நினைத்து கலங்கிய நந்தினி..காட்டுப்பகுதிக்கு வரழைத்து உல்லாசம்.. இறுதியில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்தகதி

எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத, அடங்க மறுக்கிற அடாவடித்தனமாகச் செயல்படுகிற சமூக சீர்குலைவு சக்தியாக சீமான் விளங்கி வருகிறார். சீமான் மீது தமிழக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து, இவரது சட்டவிரோத பேச்சின் அடிப்படையில் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் பகுதியில் இவர் தங்கியிருந்த இடங்களில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், தமிழ்நாட்டிலிருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இவர் ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையிலிருந்து சமீபத்தில் வெளிவந்திருக்கிறார். 

இதையும் படிங்க;- திருமணமான ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம்.. நிர்வாண கோலத்தில் இளம்பெண் படுகொலை..!

சர்வதேச போதை கடத்தலில் சம்மந்தப்பட்டு, பாகிஸ்தான், துபாய், இலங்கையில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டிருப்பதற்கான ஆதாரங்களும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் சிக்கியுள்ளன. அதேபோல, ஆயுதங்கள் கடத்தலிலும் இவர் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.  வெளிநாடுகளில் வாழ்கிற விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இவர் மூலமாக பெரும் நிதியை வழங்கி வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விசாரணை முடுக்கி விடப்படுவதன் மூலம் தமிழகத்தில் தேசவிரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடுக்க முடியும். இல்லையெனில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளால்  தமிழகத்தின் அமைதியான சூழல் பாதிக்கப்படும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன். 

அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்குப் புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்பட்டு வருகிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இத்தகைய சீர்குலைவு சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவில்லையெனில், அவரது வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான தீவிரவாத பாதைக்குச் செல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். இந்த போக்கு தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவரது பேச்சுகள், நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, சட்ட விரோதமாகச் செயல்படும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, தமிழகத்தின் அமைதிக்கு பெரும் துணையாக இருக்கும் என்பதைக் கூற விரும்புகிறேன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!