புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி.
30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.
30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக 9 மற்றும் அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்ட 16ல் 10 இடங்களிலும், 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிமுக போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வியை தழுவியது.
மொத்தமாக 16 இடங்களில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேரும் ரங்கசாமி முதல்வராக ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எம்.எல்.ஏக்களும் ரங்கசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்த ரங்கசாமி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சியமைக்க உரிமை கோரியதாகவும், அவர்கள் விரும்பும் நேரத்தில் பதவி பிரமாணம் செய்துவைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.