கொலைவெறி பிடித்த அமைச்சரின் மகன்.. காரை விவசாயிகள் மீது ஏற்றி கொலை.. கலவரம்.. கொதிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி.

By Ezhilarasan BabuFirst Published Oct 4, 2021, 9:17 AM IST
Highlights

இதனால் அரியாணா மாநிலம் கர்னாலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு அரசு பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர், கேரி என்ற ஊருக்கு ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் கேசவ் பிரசாத் மெளரியா  வருவதற்காக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்கிம்பூர் கேரி என்ற ஊரில் போராடி வரும் விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் (03.10.2021) காரை ஏற்றி படுகொலை செய்யும் காட்டுமிராண்டி தனத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி நாட்டை உலுக்கி வருகிறது என்றும், இதை வன்மையாக கட்டிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

இந்த இரக்கமற்ற செயலால் லவ்பிரீத் சிங் (20) தல்ஜித் சிங் ( 35) நஜ்சத்தார் சிங் (60) குருவிந்தர் சிங் (19) ஆகிய விவசாயிகள் மரணமடைந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதுடன் பலர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத, கார்ப்ரேட் ஆதரவு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பத்து மாதங்களாக போராடி வருகின்றனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்.  கரிஃப் பருவ அறுவடையைத் தொடர்ந்து அக்டோர் முதல் தேதியில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என வழக்கமாக  வெளியிடப்படும்  உத்தரவில், நடப்பாண்டில் 11 ஆம் தேதியில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படும்  என அறிவித்து, விவசாயிகளை ஆத்திரமூட்டியது. இதனால் அரியாணா மாநிலம் கர்னாலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு அரசு பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர், கேரி என்ற ஊருக்கு ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் கேசவ் பிரசாத் மெளரியா  வருவதற்காக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இந்த தளத்தில் அமர்ந்து  அமைச்சர் வருகைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். போராடி வரும் விவசாயிகளை சமாதானப் படுத்த வக்கில்லாத, கொலைவெறி பிடித்த அமைச்சரின் மகன்   தனது காரை விவசாயிகள் மீது ஏற்றி, தாறுமாறாக ஓட்டி படுகொலை செய்துள்ளார். இந்த மிருக வெறிச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

இந்த படுகொலைக்கு காரணமான அஸிஸ் மிஸ்ரா உட்பட தொடர்புடையோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். நடந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், உள்துறை இணை அமைச்சர் அஜாய் மிஸ்ராவை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாளை (04.10.2021) நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரும். பொதுமக்களும் பங்கேற்று, ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!