முந்திரி ஆலையில் பாமக நிர்வாகி அடித்து கொலை செய்தது அம்பலம்.. திமுக எம்பி தலைமறைவு.. 5 பேர் கைது..!

By vinoth kumarFirst Published Oct 9, 2021, 8:13 AM IST
Highlights

கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த பாமக நிர்வாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்.பி. ரமேஷ் தலைமறைவாகி உள்ளார்.

கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த பாமக நிர்வாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்.பி. ரமேஷ் தலைமறைவாகி உள்ளார். 

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் திமுகவைச் சேர்ந்த எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றிய தொழிலாளியும், பாமக நிர்வாகியுமான கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இந்நிலையில் இவரது மரணம் கொலை எனவும், இதற்கு எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் எனக் கூறி, அவரின் மகன் செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 19-ம் தேதி வேலைக்குச் சென்ற எனது தந்தை வீடு திரும்பவில்லை. அவர் விஷம் குடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடலில் ரத்தக் காயங்கள் மற்றும் அடித்துதுன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது. எனவே, எனது தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

அவரது மரணம் குறித்து காடாம்புலியூர் போலீசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை. எனவே, எனது தந்தையின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கோவிந்தராஜ் உடலை கடந்த செப்டம்பர் 23ம் தேதி பிரேத பரிசோதனை செய்து முடித்தனர். 

இதனிடையே, கோவிந்தராஜ் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். நிலையில் ஏடிஎஸ்பி  கோமதி தலைமையில் சிபிசிஐடி கடந்த செப்டம்பர் மாதம் 28 ம் தேதி விசாரணை தொடங்கியது. கடலூர் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா உடன் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கோவிந்தராஜ் அடித்து துன்புறத்தப்பட்டதாக அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து, கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது அம்பலமானது. இதனைத் தொடர்நது சிபிசிஐடி போலீசார் ஊழியர்கள் 5 பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். எம்.பி ரமேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  எம்பி ரமேஷ் தலைமறைவாகியிருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

click me!